தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர், விவசாயம் மட்டுமில்லாமல் பைனான்ஸ் தொழிலுடன் தூத்துக்குடி தெர்மல் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தப்பணி ஒப்பந்தக்காரர் உள்ளிட்ட பல தொழில்களிலும் ஈடுபட்டு வந்தார். தி.மு.கவின் செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். இவர், திருச்செந்தூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும் கூட.தூத்துக்குடி மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் பெட்ரோலியம் கொண்டு செல்வதற்காக குழாய்களை பதிக்கும் பணியை துவக்கி உள்ளது. இத்திட்டத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கருணாகரன் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கும் கருணாகரனுக்கும் அவ்வப்போது மோதலும் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குலையன்கரிசல் கிராமத்தில் உள்ள விவசாயிகள் சங்கத்தைப் பூட்டி, கருணாகரன் சாவியை எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று மாலை குலையன்கரிசல் பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் இருந்து காரில் வீடு திரும்பினார் கருணாகரன். தோட்டத்தின் வாசல் பகுதியில் சென்ற போது, இரண்டு பைக்கில் வந்த கும்பல்,காரை வழி மறித்தனர். காரில் இருந்து இறங்கிய கருணாகரனை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டுத் தப்பியோடினர்.இதில், தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ஆழமாக வெட்டுபட்டு ரத்தவெள்ளத்தில் மிதந்த கருணாகரன்,சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மறைந்த முன்னாள் மாவட்டச் செயலாளரான பெரியசாமியின் தீவிர ஆதரவாராக இருந்த போது, தூத்துக்குடி யூனியன் சேர்மனாக பதவி வகித்தார் கருணாகரன். பெரியசாமியின் மறைவிற்குப் பிறகு, தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான அனிதாராதா கிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பணப்பாட்டுவாடா தொடர்பானவற்றை கருணாகரன் கவனித்து வந்ததாகவும் இதில், சில பிரச்னைகள் எழுந்ததால் இவரை அனிதா ராதாகிருஷ்ணன் ஒதுக்கி வைத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல, கருணாகரனும் அனிதா ராதாகிருஷ்ணனை விட்டுவிலகி, தற்போது ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏவான சண்முகையாவுடன் கைகோர்த்து செயல்பட்டு வந்துள்ளார்.கடந்த சில நாள்களுக்கு முன்பு முத்தையாபுரத்தில், கருணாகரனுக்குச் சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தை காலி செய்துவிட்டு, தனது சொந்த ஊரான தண்டுபத்துவிற்கு மாற்றிவிட்டார் அனிதா ராதாகிருஷ்ணன். அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களில் ஒருவரான பில்லா ஜெகன், ஏற்கெனவே கொலை வழக்கில் கைது செய்ப்பட்டுள்ள நிலையில், தற்போது அனிதாவின் மற்றொரு ஆதரவாளரான கருணாகரன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
You must be logged in to post a comment.