இராமநாதபுரம், நவ.15- இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் ஒன்றியம் பந்தப்பனேந்தல் ஊராட்சி சித்தனேந்தல் கிராமம், அக்கிரமேசி கிராம மக்களை மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் நேரில் சந்தித்து அடிப்படை வசதிகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மக்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள், தங்கள் பகுதிகளின் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். சித்தனேந்தல் கிராமத்தில் கீழநாட்டார் கால்வாயில் பாலம் அமைத்து தரவும், தங்கள் பகுதிக்கு பொதுமயானம் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
அக்கிரமேசி கிராம மக்கள் தங்கள் பகுதியில் உள்ள மதகு அணைகளை சீரமைக்க வேண்டும், சீரணிக்கண்மாய் மூலம் அக்கிரமேசி கண்மாய்க்கு வைகை நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கள்ளடியேந்தல் சாலையில் உள்ள தும்பு பாலத்தை சீரமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தினார். மகளிர் பொருளாதார ரீதியாக பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை துறைச்சார்ந்த அலுவலர்களை அணுகி பொதுமக்கள் பயன்பெற வேண்டும். மழைக்காலத்தை கருத்தில் கொண்டு காய்ச்சிய குடி தண்ணீரை பயன்படுத்துவதுடன், காய்ச்சல் அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை எடுக்க வேண்டும். மருத்துவக்குழு மூலம் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாம்களில் பங்கேற்று உரிய சிகிச்சை பெற்று நோய் தொற்றின்றி உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். பரமக்குடி வட்டாட்சியர் ரவி, நயினார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, பந்தப்பனேந்தல் ஊராட்சிமன்றத் தலைவர் தவமணி, அக்கிரமேசி ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.