மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக சார்பில், அதன் மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தலைமையில், முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பொய் வதந்திகளை பரப்பி வரும் கேரளா அரசியல்வாதிகளை கண்டித்து பேருந்துநிலையம் அருகே கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா பேசினார்.முல்லைப் பெரியாறு அணையில், தமிழகத்திற்கான உரிமையை நிலை நிறுத்த சட்டம் போராட்டம் நடத்தி வெற்றி கண்டது, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தான். ஆனால் தற்போது ஆளும் தி மு க அரசு தமிழகத்திற்கான உரிமையை நிலைநாட்டுவதற்கான எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனவும், தற்போது அணைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த கேரளா அரசியல்வாதிகளே கண்டித்து ஆளும் திமுக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கேரளா அரசியல்வாதிகளை கண்டித்து கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டது.இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜன்செல்லப்பா,முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, தமிழ் உணர்வாளர்கள் என பேசிக்கொள்ளும் எதிர்கட்சியினர் திமுகவினரோடு கூட்டணி வைத்து அமைதி காத்து வருகின்றனர்.இதில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இது தமிழக மக்களுக்கான உரிமை போராட்டம். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போது முல்லை பெரியாறு அணைப் பகுதியில் நுழைய அஞ்சிய கேரளா அரசியல்வாதிகள் தற்போது ஆய்வு என்ற பெயரில் பொய் வதந்திகளை பரப்பி வருகின்றனர். பேபி அணை பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி அளித்த கேரளா அரசுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக கேரளா பொதுப்பணித்துறை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டிருப்பதோடு கேரளா அரசு அளித்த உத்தரவை ரத்து செய்துள்ளது குறித்து எந்தவித எதிர்ப்பையும் தமிழகமுதல்வர் தெரிவிக்கவில்லை, என குற்றம் சாட்டினார்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுல்லான் என்ற செல்வம் மதுரை கிழக்குத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன் மேலூர் ஒன்றிய தலைவர் பொன்னுசாமி உட்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதேபோன்றுமதுரையில், திமுக அரசைக் கண்டித்து, கொட்டும் மழையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தலைமை வகித்தார்.முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், முன்னாள் துணை மேயர் திரவியம், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாத்துரை உள்ளிட்டோர், தமிழக அரசைக் கண்டித்து கோஷமிட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.