Home செய்திகள் அருப்புக்கோட்டை அருகே 10ம் வகுப்பு படித்துவிட்டு, இரண்டு ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது…..

அருப்புக்கோட்டை அருகே 10ம் வகுப்பு படித்துவிட்டு, இரண்டு ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது…..

by mohan

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள செம்பட்டி பகுதியில், போலி டாக்டர் ஒருவர் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வெங்கடேஸ்வரன், அலுவலக உதவியாளர் பாலமுருகன் மற்றும் அருப்புக்கோட்டை போலீசார் செம்பட்டி பகுதிக்குச் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நடுத்தெரு பகுதியில் ஒரு சிறிய வீட்டில் வைத்து, ஆங்கில மருத்துவம் பார்த்துவந்த வெள்ளக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (61) என்பவர், 10ம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்துவருவது தெரிந்தது. சண்முகசுந்தரம் கடந்த 2 ஆண்டுகளாக, இந்தப்பகுதியில் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாகவும், ஏராளமானவர்களுக்கு மருத்துவம் பார்த்து ஊசி போட்டு, மருந்து, மாத்திரைகளையும் விற்பனை செய்து வந்ததாகவும் அந்தப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் அந்த வீட்டில் மருத்துவ உபகரணங்கள், மருந்து மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவைகள் ஏராளமாக இருந்ததையும் போலீசார் கண்டு பிடித்தனர். அந்தப்பகுதி விஏஓ கண்ணன் முன்னிலையில் போலி மருத்துவர் மருத்துவமனையிலிருந்த மருத்துவப் பொருட்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் புகாரின் பேரில், போலி டாக்டர் சண்முகசுந்தரத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேக

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com