தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், “தற்போது உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுபாடுகளை விதித்தும், காய்கறி மற்றும் மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்கிற கடைகளை தவிர்த்து மற்ற கடைகளை திறக்க தடை விதித்து உள்ளது.இந்த கட்டுப்பாடுகளினால் பல்வேறு தரப்பினர் வாழ்வாதாரங்களை இழந்து வருகிறார்கள். மத்திய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் கொரோனா நோயாளிகளிடம் இருந்து பெறப்படும் முககவசம், தடுப்பு ஆடைகள் மற்றும் இதர மருத்துவ கழிவுகளை கையாள வழி முறைகளை அறிவித்து உள்ளனர். மருத்துவ மனைகளில் இருந்து பெறப்படும் இந்த கழிவுகளை கையாள தனி நிறுவனங்கள் உள்ளன. ஆனால் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கொரோனா நோயாளிகள் பெருகி விட்ட சூழலில் பல வீடுகளில் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் மருத்துவ கழிவுகளை கையாள்வது நகர்ப்புற மற்றும் கிராமப்புற தூய்மை பணியாளர்கள் தான். அவர்களுக்கும் எவ்வித ஊக்கத் தொகையும் வழங்கப்படுவதில்லை.
கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வு, மருத்துவ வசதிகள், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மருத்துவ செய்திகளை பல இடங்களில் சேகரித்து உரிய நேரத்தில் மக்களுக்கு அளித்து வரும் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் பலர் செய்தி சேகரிக்க சென்ற இடங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்து உள்ளனர் என்பது குறித்த செய்திகள் அவ்வப்போது ஊடகங்களில் வருகிறது. புள்ளி விவரங்கள் படி இந்தியா முழுவதும் சுமார் 250 பத்திரிக்கை துறையினர் கொரோனா தொற்றால் உயிரிந்துள்ளார்கள்.சமீபத்தில் மத்திய அரசின் உத்தரவை அடுத்து தமிழக அரசு ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களுக்கு கொரோனா வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு, இதர பணியாளர்களுக்கு மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்டது.
கொரோனா பணிகளில் ஈடுபடும் அனைத்து காவல்துறையினருக்கும், உள்ளாட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அவர்கள் பணியில் உள்ள ஆபத்தை கருத்தில் கொண்டும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும் ஒரு மாத ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்கவும், தினசரி நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிருபர்களுக்கும், தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் தடை செய்யப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்துள்ள சினிமா தியேட்டர் பணிபுரிவோர், உடற்பயிற்சி கூடம், சலூன், பியூட்டி பார்லர் பணியாளர்கள், ஆம்னி பேருந்து, தனியார் பேருந்து, மினி பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துனர்கள், ஆட்டோ, வாடகைக் கார், லோடு ஆட்டோ டிரைவர்கள், அமைப்பு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் அரசின் கொரோனா தடுப்பு மற்றும் பரவல் நடவடிக்கைகளால் வாழ்வாதாரம் இழந்த அனைவருக்கும் ரூ. 10,000/- நிவாரணத் தொகை வழங்க உத்திரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது
You must be logged in to post a comment.