அனுமதியின்றி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி கிராமத்தில் அனுமதியின்றி முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசு அரசாணை 2017-ன் படி 6 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகாவை சேர்ந்த ராமச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு.அதில், “திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகாவிலுள்ள மணியங்குறிச்சி கிராமம் பல கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்தக் கிராமத்தில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. மணியங்குறிச்சி கிராமத்தில் திருச்சி பெரம்பலூர் இணைக்கும் 13 அடி சாலை உள்ளது. இந்த சாலையில் அதிமுகவை சேர்ந்த நிர்வாகி உரிய அனுமதி பெறாமல் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். சிலை அமைக்க உள்ள இடம் அரசு பொது நிலமாக இருந்து வருகிறது. இப்பகுதியில் சிலை அமைப்பதால் விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்படும், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது, ஏற்கனவே இப்பகுதியில் அதிக அளவு வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை. எனவே, சிலை அமைக்கும் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்கவும், மேலும் அப்பகுதியில் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என அதிகாரிகளுக்கு அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் சட்டத்திட்டங்களை கடுமையாக நடைமுறைபடுத்த வேண்டும் என கூறி தமிழக அரசு அரசாணை 2017-ன் படி 6 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.