Home செய்திகள் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து, ஒருவர் பரிதாப பலி…..

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து, ஒருவர் பரிதாப பலி…..

by mohan

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மாரனேரி பகுதியில், ராஜீவ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நேற்று ஞாயிறு கிழமை பட்டாசு ஆலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்று காலை வழக்கம் போல, பட்டாசு ஆலையில் வேலைகள் துவக்குவதற்காக தொழிலாளர்கள் ஆலைக்கு வரத்துவங்கினர். மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையை தொழிலாளர்கள் முருகன், கந்தசாமி, தர்மலிங்கம் ஆகிய 3 பேரும் திறந்து, மூலப்பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, மூலப்பொருட்களில் உராய்வு ஏற்பட்டு பலத்த சத்தத்துடன், மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறை வெடித்து சிதறியது. பயங்கரமான அதிர்வினால் அடுத்தடுத்த அறைகளும் இடிந்து விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி, பலத்த காயமடைந்த தர்மலிங்கம் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். முருகன், கந்தசாமி இருவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 6 அறைகள் இடிந்து விழுந்து சேதமானது. தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி பாலமுருகன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்து குறித்து மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பட்டாசு ஆலையின் போர்மேன் முத்துராஜ், மேலாளர் கோமதிராஜ் மீது வழக்குபதிவு செய்த போலீசார், தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!