.மதுரையில் பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு பொதுத் துறை வங்கிகளின் கூட்டமைப்பு யு.எப்.பி.யு., தலைமையில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் ஐ.டி.பி.ஐ., வங்கியுடன் மேலும் 2 பொதுத் துறை வங்கிகளை இணைப்பதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பொதுத்துறை வங்கி ஊழவர்கள் மதுரையில் பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் ஸ்ரீதர், செந்தில் ரமேஷ் பரதன், ஜோசப் சகாய டெல்வர் ஆகியோர் தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது.கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் கூறியதாவது:-தனியார் வங்கிகள் திறம்பட செயல்படும் என்ற அரசின் வாதம் தவறானது. 1913 முதல் 1968 வரை 1639 தனியார் வங்கிகள் திவாலாகி உள்ளன. பொதுத் துறை வங்கிகளின் சிறப்பான செயல்பாடுகளினால் பொது மக்களின் சேமிப்பு 145 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பொதுத் துறை வங்கிகளின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தனியார் மயமாக்கும் போது பொது மக்களின் முதலீடுகள் கேள்விக்குறியாகும். “யெஸ்” வங்கி மற்றும் லட்சுமி விலாஸ் வங்கிகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.கடந்த 10 ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகள் ரூ.14 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் ரூ.6 லட்சத்து 32 ஆயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.100 கோடிக்கு மேல் கடனாக பெற்ற பெரும் தொழிலதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் தொகை மட்டும் ரூ.2 லட்சத்து 78 ஆயிரம் கோடியாம். அவர்களிடமிருந்து கடன் தொகையை வசூலிக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மாறாக கடன் தொகையை திரும்ப செலுத்த இயலாத கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிலதிபர்களிடம் பொதுத் துறை வங்கிகளை ஒப்படைப்பது பொது மக்களின் சேமிப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மத்திய அரசின் இந்த முடிவை கைவிட வேண்டும் என்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.