தென்காசி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் 2024 ஜனவரி 04 மற்றும் 06 ஆகிய தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் முன்னெடுப்பின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைபடுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும், சென்று சேரும் வண்ணம் மற்றுமொரு மைல்கல்லாக மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் முதல்வரின் முகவரி துறையால் நடைமுறைப்படுத்தப் படுகிறது. மக்களுடன் முதல்வர் என்ற இத்திட்டம் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 13 அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் 18.12.2023, 20.12.2023, 22.12.2023, 27.12.2023, 03.01.2024 மற்றும் 05.01.2024 ஆகிய 7 நாட்களில் மொத்தம் 55 சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையின் காரணமாக 18.12.2023 திங்கள் கிழமை அன்று தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, செங்கோட்டை சங்கரன்கோவில், மற்றும் சுரண்டை ஆகிய நகராட்சிகளில் நடைபெற இருந்த 6 சிறப்பு முகாம்கள் இரத்து செய்யப்பட்டு 04.01.2024 வியாழக் கிழமைக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 20.12.2023 புதன் கிழமை அன்று தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, செங்கோட்டை, சங்கரன்கோவில், சுரண்டை ஆகிய நகராட்சிகள் மற்றும் சிவகிரி, பண்பொழி ஆகிய பேரூராட்சிகளில் நடைபெற இருந்த மொத்தம் 8 முகாம்கள் இரத்து செய்யப்பட்டு 06.01.2024 சனிக் கிழமைக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளன. மக்கள் அரசின் பல்வேறு துறைகளை நாடிச்சென்று பெறக்கூடிய சேவைகளை, அந்தந்த ஊர்களுக்கே அனைத்துத் துறைகளும் நேரடியாக சென்று வழங்கக்கூடிய இந்த சிறப்பு திட்டத்திற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு நல்கி சிறந்த முறையில் பயன்படுத்தி சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.