மதுரை கோட்டத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட ரயில்களின் கழிவறை குழாய்களை திருடி விற்பனை செய்த இருவர் கைது..
மதுரை கோட்டத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மதுரை கோட்டத்தில் இயங்கும் ரயில்களில் உள்ள குழாய்களில் கழிவறை குழாய்கள் அவ்வப்போது மாயமாகுவதாகவும் இதன் காரணமாக கழிவறையில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுவதாகவும் தொடர்ந்து பயணிகள் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தியதில், மர்ம நபர்கள் ரயில் பெட்டியில் உள்ள கழிவறைகளில் குழாய்களை மட்டும் திருடி செல்வது தெரிய வந்துள்ளது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், ரயில் பயணத்தின் போது காவல்துறையினர் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ளனர்.
அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் பையில் இரும்பு பொருட்களுடன் ரயில் நிலையத் துக்குள் சுற்றித்திரிந்த கோ. புதூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மற்றும் செல்வம் ஆகிய இருவரை பிடித்து விசாரணை செய்தபோது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
மது அருந்துவதற்காக சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 15-க்கும் மேற்பட்ட ரயில்களின் கழிவறையில் உள்ள குழாய்களை கழட்டி விற்பனை செய்தது தெரிய வந்ததை அடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் பொருட்களை பெற்ற இரண்டு கடை உரிமையாளர்கள் என மொத்தம் நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரயில் பெட்டி குழாய்களை மட்டும் திருடி விற்பனை செய்து வந்த சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.