மதுரையில் கள்ளழகர் நேற்று வைகை ஆற்றில் இறங்காததால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில் இன்று (08/05/2020) அழகர், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த நிகழ்வு மட்டும் அழகர்கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது..
மதுரை வைகை ஆற்றில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று கள்ளழகர்இறங்குவது வழக்கம். இதனை மதுரையை சுற்றியுள்ள மாவட்டங்கள் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் வந்திருந்து தரிசனம் செய்து மகிழ்வதும் வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரானா தொற்றின் கொடிய தாக்குதலால், அழகர் இறங்கும் வைபவம் நேற்று நடைபெறவில்லை.
இதனால் மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள மக்கள் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள ஆன்மீக பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அழகர் ஆற்றில் இறங்கும் நேரத்தில் உள்ளூரை சேர்ந்த சிலர் மட்டும் ஆற்றுக்குள் வந்த பொதுமக்கள் சிலர் அழகரை நினைத்து சூடம் ஏற்றி அழகரை நினைத்து வழிபட்டனர்.
இந்த நிலையில் ஆண்டுதோறும் நடைபெறும் அழகர் திருவிழா இந்த ஆண்டு இடை நில்லாமல் நடைபெறுவதற்காக, மதுரை அழகர்கோவிலில் உள்ள கோயில் வளாகத்திற்குள்ளேயே மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது . இந்த நிகழ்வு இன்று கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது.
இதற்காக இன்று அதிகாலையில் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் உள்ளிட்டவை மற்றும் மட்டும் கோவில் வளாகத்திற்குள்ளேயே பட்டாச்சாரியார்கள் மற்றும் பரிசாகரர்கள் உரிய பாதுகாப்பு நெறி முறைகளை பயன்படுத்தி கோவிலின் உட்பிரகாரத்தில் இந்த நிகழ்வை நடத்தி வைத்தனர்..
இதையொட்டி கள்ளழகர் கோவிலில் இன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை விசுவரூப தரிசனம், பெருமாள்ஆண்டாள் சன்னதி முன்பு எழுந்தருளல், காலை 8 மணிக்கு கள்ளழகர் பெருமாளுக்கு எதிர்சேவை அலங்காரமும், 10 மணிக்கு குதிரை வாகன சேவையும், நடந்தது.
மேலும் நண்பகல் 12 மணிக்கு சைத்திய உபசார சேவையும், மதியம் 1.30 மணிக்கு சேஷ வாகன சேவையும் நடைபெற்றது.. பின்னர் 4.30 மணிக்கு கருட சேவையுடன் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்குதலும், மாலை 6.30 மணிக்கு புஷ்ப பல்லக்கு சேவையும், இரவு 8 மணிக்கு அழகர் இருப்பிடம் செல்லுதல் நிகழ்ச்சியும் நடந்தன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோவில் வளாகத்திற்குள்ளேயே ஆகமவிதிப்படி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.. மேலும் இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் நேரடியாக கண்டு கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் இந்த நிகழ்வுகள் அனைத்தையும் www.thhrce.gov.in என்ற இணையதளம் மூலமும் யூடியூப் மூலமும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவற்றின் மூலமாக கள்ளழகரை ஏராளமான தரிசனம் செய்து ஆன்மீக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலர் இல்லங்களில் இருந்தவாறே ஆடம் ஏற்றியும், சர்க்கரை விளக்கு ஏற்றியும் அழகரை நினைத்து வழிபட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.