மதுரையில் போக்குவரத்து விதிகளை தானியங்கி முறையில் அபராதம்!மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் எச்சரிக்கை..
விபத்து மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து சிக்னல்களில் கேமராக்கள் மூலம் கண்காணித்து, தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துணை ஆணையர் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில், ‘பொது நலனில் போக்குவரத்துத் துறை’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் நெல்லை பாலு வரவேற்று பேசினார். மதுரை மாநகரப் போக்குவரத்துத் துணை ஆணையர் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது; “மதுரையில் விபத்துக்களைத் தவிர்க்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள 32 சிக்னல்களும் வினாடிகள் கவுண்டவுன் மூலம் இயக்கப்படுகிறது. சமீபமாக, ரிமோட் கன்ட்ரோல் மூலம் சிக்னல்கள் இயக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படுகிறது. இப்போதைய தலைமுறைக்கு ஏற்ப, ட்ரெண்டிங் ஆக சிக்னல்களில் புதிய, பழைய பாடல் இசைகள், திருக்குறள் உள்ளிட்ட ஆடியோ ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
விரைவில் எல்லா சிக்னல்களிலும் தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்பட உள்ளது. கேமராக்கள் மூலமாக விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. இம்மாதத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தை ஒட்டி, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தவிருக்கிறோம்.
பிரதான சாலைகளில் கடை முகப்பு ஆக்கிரமிப்புகளால், வாகனங்கள் பாதி சாலைகளை ஆக்கிரமித்து விடுகின்றன. இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகி விடுகிறது. மக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.
ரோட்டரி மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகானந்த பாண்டி, மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பொருளாளர் எஸ் கதிரவன், அனைத்து ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர்கள் சிவ சங்கர், பில்லி கிதியோன் , ஆடிட்டர் சேது மாதவா, ஸ்டார் ரோட்டரி சங்க பொருளாளர் கன்னியப்பன் மதுரை மீனாட்சி ரோட்டரி சங்க தலைவர் ஜெயசீலன், கிங் சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் செல்வராஜ், ஆதவன், தொழிலதிபர் மகேந்திரன், ‘வழிகாட்டி’ சமூக செயற்பாட்டு அமைப்பு நிறுவனர் மணிகண்டன், சுப்பிரமணியன், ராஜ்குமார், கல்லூரி உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க தலைவர் நெல்லை பாலு செய்திருந்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.