12
டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி நாளை (18-ம் தேதி) முதல் லாரி உரிமையாளர்கள் நாடுமுழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதுதொடர்பாக அகில இந்திய தரைவழி போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ரஜிந்தர் சிங், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது, “நாடு முழுவதும் 80 லட்சம் சரக்கு லாரிகள் ஓடுகின்றன. தினமும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. காப்பீட்டுத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுங்கச்சாவடி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், லாரி உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கடந்த 5 மாதங்களில் டீசல் ரூ.7.45 விலை உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டியில் பெட்ரோல், டீசல் மற்ற துறைகளில் அமல்படுத்தியுள்ளது போல் பெட்ரோல், டீசலும் ஜிஎஸ்டியில் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வந்தால் லிட்டருக்கு சுமார் ரூ.20 வரை குறையும். மேலும், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்வதை நிறுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீட்டு தொகையை தொடர்ந்து உயர்த்தி வருவதை ரத்து செய்ய வேண்டும், நீண்ட காலமாக சுங்கக் கட்டணம் வசூலித்து வரும் சுங்கச்சாவடிகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும். மேற்கண்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளோம்.
இதுதொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென வலியுறுத்தினோம். ஆனால், இதுவரையில் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. எனவே, ஏற்கெனவே அறிவித்தபடி, நாளை காலை 6 மணி முதல் நாடுமுழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இந்தியா முழுவதும் 75 லட்சம் லாரிகளும் ஓடாது. இதில், தமிழகத்தில் மட்டும் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது. ஆனால், தண்ணீர், பால், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் லாரிகள் வழக்கம்போல் ஓடும். இவ்வாறு அவர்கள் கூறினர்._
You must be logged in to post a comment.