நீதிமன்ற உத்தரவுப்படி, அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகளின் ஆவணங்களைப் பதிவின்போது பயன்படுத்துவது தொடர்பான புதிய நடைமுறை வரும் திங்கள்கிழமை (ஆக. 13) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்து பதிவுத் துறைத் தலைவர் ஜெ.குமரகுருபரன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: கடந்த 2016 அக். 20-ஆம் தேதிக்கு முன்பாக வீட்டு மனையாகப் பதிவு செய்யப்பட்டவற்றை அங்கீகரிக்கப்பட்ட மனைகளாகப் பதிவு செய்யலாம் என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பதிவு அலுவலர்கள் சரியாகச் செயல்பட்டுள்ளார்களா என்பதைச் சரிபார்த்து அனுப்புமாறு அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் (தணிக்கை) அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. புதிய நடைமுறை ஏன்?: மனைப் பிரிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளதா அல்லது இரண்டாவது பதிவு போன்ற விவரங்களைச் சரிபார்த்து அனுப்புவது மாவட்டப் பதிவாளர்களின் கடமை.
இவ்வாறு சரிபார்ப்பதற்கு மனைப் பிரிவு அங்கீகரிக்கப்பட்ட உத்தரவின் நகலை ஒவ்வொரு பதிவு அலுவலரிடம் இருந்தும் மாவட்டப் பதிவாளர்கள் (தணிக்கை) கேட்டுப் பெற வேண்டியுள்ளது. அந்த நகலை பதிவு அலுவலர் அளிக்காமல் போனாலோ அல்லது அவர் வேறு அலுவலகத்துக்குச் சென்றாலோ போதிய தகவல்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும். இதனால், அங்கீகரிக்கப்பட்ட மனையையும் அங்கீகரிக்கப்படாத மனையாகக் கருதும் நிலை உருவாகும்.
இதைத் தவிர்க்க மனைகள் குறித்த ஆவணங்களை வருங்காலத்தில் பதிவுக்காகத் தாக்கல் செய்யும் போது அங்கீகார உத்தரவு நகலை ஆவணத்துடன் இணைக்க வேண்டும். இந்த உத்தரவு நகல் பதிவு ஆவணத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்படுவதால், அந்த நகலில் அனைவரும் கையெழுத்திட வேண்டும். அதேசமயம், அசல் உத்தரவினை ஆவணத்துடன் இணைக்கக் கோரி கட்டாயப்படுத்தக் கூடாது.
வரும் திங்கள் முதல் நடைமுறை: உத்தரவின் நகல் இணைக்கப்படுவதால் எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட சொத்தினை வாங்குபவர்களுக்கும் அது பயனுடையதாக இருக்கும். இப்புதிய நடைமுறை வரும் திங்கள்கிழமை (ஆக.13) முதல் நடைமுறைக்கு வருகிறது.
தொகுப்பு அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்
You must be logged in to post a comment.