தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததும், காசிக்கு நிகரான புண்ணிய தலமான இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராரட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இன்று ஆடி அமாவாசையட்டி தமிழகம், தென் மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் நேற்று இரவு இராமேஸ்வரம் வந்தனர். இரவில் இருந்தே அக்னி தீர்த்தக்கடலில் குவிந்த மக்கள் இன்று அதிகாலை பித்ருகளுக்கு அரிசி மாவு, எள் கலந்த பிண்டம் பிடித்து தர்ப்பணம், பூஜைகள் செய்து முன்னோரை வழிபட்டனர்.
தொடர்ந்து கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடிய பக்தர்கள் பல மணி நேரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். காலை 8:50 மணிக்கு பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப் பல்லக்கில் வீதியுலா வந்தார். காலை 11 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ராமர் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கினார். கோயில், நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. கோயில் நுழைவு வாயிலில் தீவிர சோதனைக்கு பின்னர் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கூட்ட நெரிசலான இடங்களில் கேமராக்கள் மூலம் பக்தர்களை போலீசார் கண்காணித்தனர். ஆயிரக்கணக்கானோர் கூடியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகனம் நிறுத்துமிடங்களில் நிலவிய இட நெருக்கடியால் கோயிலுக்கு வெளியே 3 கி.மீ., து£ரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் வெளியூர் பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர். ராமேஸ்வரத்தில் உள்ள குறுகலான தெருக்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் உள்ளூர்வாசிகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பக்தர்கள் வசதிகளுக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு நகரங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
You must be logged in to post a comment.