தமிழகம் முழுவதும் நவநாகரீகம் என்ற பெயரில் இளைஞர்களிடையே மேற்கத்திய கலாச்சாரம் நுழைந்து, ஆட்டிப்படைத்து வருகிறது. உணவுகள், உடைகள் என எல்லாவற்றிலும் மேற்கத்திய கலாச்சாரம் புகுந்துவிட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் பெருநகரங்களில் வசிக்கும் இளம்பெண்கள் போதை பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளனர் என்பது வேதனை.
கோவை அவினாசி சாலை goldwins பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் பெண்களுக்கான கேளிக்கை நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவிகள் மற்றும் தனியார் ஐடி நிறுவன பெண் ஊழியர்கள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது. Ladies wednesday என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இது போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் நெருப்பை பற்றவைத்து நடனமாடும் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விடுதியில் நடைபெறும் கேளிக்கை நிகழ்ச்சியில் ஒவ்வொரு முறையும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் இளம்பெண்களை பங்கேற்க தூண்டும் வகையில், மாடல் மங்கைகள் மற்றும் மேற்கத்திய இசைக் கலைஞர்களைக் கொண்டு வரவேற்பு வீடியோக்களும் இணையதளங்களில் வெளியிடப்பட்டு, முன்பதிவுகள் நடத்தப்படுகின்றன.
இதற்காக பெருந்தொகையை கட்டணமாக வசூலிக்கும் விடுதி நிர்வாகம், இளம்பெண்களை போதையில் மிதக்கவிடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் நள்ளிரவில் மது போதையில் தள்ளாடியபடி வாகனம் ஓட்டும் இளம்பெண்கள், அவ்வப்போது விபத்துகளில் சிக்குவதும் வாடிக்கையாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அந்த விடுதியில் நடைபெறும் கேலிக்கூத்துகள் தெரிந்தும், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. நள்ளிரவு வேளையில் குடிபோதையில் அரைகுறை ஆடையில் தள்ளாடியபடி வாகனத்தை ஓட்டும் இளம்பெண்களை தண்டிக்காமல் இருப்பதும் சாதாரண நிகழ்வாகவே உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
You must be logged in to post a comment.