கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர், அரியலூர் சென்ற 27 பேருக்கு கொரோனா..
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திரும்பிய வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 600 பேர் கோயம்பேடு சந்தையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதையடுத்து, அவர்களை தனிமைப்படுத்தி, பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், விருத்தாசலத்தை சேர்ந்த 7 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள், ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மாவட்டம் முழுவதும் 29 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 7 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில், இதுவரை 26 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பிய அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அங்கு வேலை செய்து வந்த, தொழிலாளர்கள், வியாபாரிகள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
அவ்வாறு திரும்பியவர்களை தனிமைப்படுத்தி, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதித்தோரின் குடும்பத்தினர், உறவினர்கள் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் முழுவதும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 6 பேர் மட்டும் குணமடைந்துள்ளனர்.
You must be logged in to post a comment.