கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக மனநலன் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே சுற்றித் திரிந்த தொழிலாளி கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் போது சமூக அமைப்பினர் மேற்கொண்ட உதவியால் குடும்பத்துடன் இணைய வாய்ப்பு அளித்துள்ளது.கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாநகரப் பகுதியில் சுற்றித் திரிந்த 60 பேரை மீட்டு மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் வைத்து உணவு அளிக்கும் பணியில் சில சமூக சேவை அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. மனிதம் விதைப்போம் அறக்கட்டளை, ஆர்.சோயா அறக்கட்டளை, ஹெல்பிங் ஹேன்ட்ஸ் அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து சாலையில் சுற்றித் திருந்த மனநலன் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர், ஊனமுற்றோரை சுத்தம் செய்து புத்தாடை வழங்கி மண்டபத்தில் வைத்து பாதுகாத்து மூன்று நேரமும் உணவு வழங்கி வருகின்றனர். இவர்களில் மனநலன் பாதிக்கப்பட்ட 60 மதிக்கத்தக்க ஒருவரை சுத்தம் செய்யும் புகைப்படம் கட்செவி அஞ்சல் மூலம் பரவியது. இதையெடுத்து, அந்த நபர் தூத்துக்குடி இரண்டாம் கேட் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்றும் வெல்டிங் தொழில் செய்து வந்த அவர் தனது மனைவி இறப்புக்குப் பிறகு மனநலன் பாதிக்கப்பட்டு வீட்டுக்குச் செல்லாமல் இருந்து வருவதாகவும் சமூக சேவை அமைப்பினருக்கு சிலர் தகவல் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, சமூக சேவை அமைப்பினர் மேற்கொண்ட விசாரணையில் வேல்முருகனுக்கு இரண்டு மகன்கள் இருப்பதும் ஒரு மகன் பழக்கடை நடத்தி வருவதும், ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல் கோயிலில் சேவை செய்து வருவதும் தெரியவந்தது.
தொடர்ந்து, வேல்முருகனிடமும், அவரது மூத்த மகனான ராமச்சந்திரனிடமும் தனித்தனியே பேச்சுக் கொடுத்து உறுதி செய்துக் கொண்ட சமூக சேவை அமைப்பினர் இருவரையும் சந்திக்க வைத்தனர். இந்த சந்திப்பின் போது நெகிழ்ச்சியடைந்த வேல்முருகன் கண்ணீர் விட்டு கதறி அழத் தொடங்கிவிட்டாராம். மகன் ராமச்சந்திரன் தன்னோடு தந்தை வேல்முருகனை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்ட போதிலும் அவருக்கு மனநலன் பாதிப்பு முழுமையாக குணமடையாத நிலை இருப்பதால் உரிய சிகிச்சைக்குப் பிறகே வீட்டுக்கு அனுப்ப முடியும் என சமூக சேவை அமைப்பினர் தெரிவித்தனர். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு குறித்து மனிதம் விதைப்போம் அறக்கட்டளை நிறுவனர் கார்த்திக் கூறியது: நாங்கள் 60 பேரை கவனித்து வந்தாலும் வேல்முருகனுக்கு லேசான அளவே மனநலன் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவரை சுத்தம் செய்யும்போது எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார் என்றார்.
You must be logged in to post a comment.