கொரோனா பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு புதுவிதமான நடன சிகிச்சை-சமூக வலை தளங்களில் வைரல்…
கொரோனா பிரிவில் தொடர்ந்து பணியாற்றும் மருத்துவர்களுக்கு புதுவிதமான நடனமாடும் சிகிச்சை முறை சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.
கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்து விட்ட நிலையில் மருத்துவர்கள் ஓய்வின்றி தொடர்ச்சியாக பணியாற்றும் நிலை உள்ளது.
கொரோனா பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் தங்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாமல், வெளியிலும் செல்ல முடியாமல் தொடர்ந்து கொரோனா வார்டில் பணியாற்றுவதால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் மருத்துவர்களின் உடல் நிலை பாதிக்கப்படுவதுடன், பணியிலும் முழுமையாக ஈடுபட முடியாத நிலை உள்ளது.
இதனை அறிந்த பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம், வார்டில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு புதுவிதமான சிகிச்சை முறையை பரிந்துரை செய்துள்ளது.
அதாவது மருத்துவர்கள் வார்டில் பணி நேரம் முடிந்தவுடன் தினமும் 30 நிமிடங்கள் நடனம் ஆட வேண்டும். இதனை கட்டாயமாக அனைவரும் பின்பற்ற வேண்டும். அப்போது தான் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, உற்சாகத்துடன் பணியாற்ற முடியும் என சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து பணி நேரம் முடிந்தவுடன் ஆண் மற்றும் பெண் மருத்துவர்கள் திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடினர். இதனால் தங்களது மன அழுத்தம் சற்று குறைந்து, உற்சாகமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இந்தி, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்பட பாடல்களுக்கு மருத்துவர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
செய்தித்தொகுப்பு அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.