வருமான வரி தாக்கல் செய்திட மற்றும் பான் எண்ணுடன் ஆதார் இணைக்க கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. 2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு 2020ம் ஆண்டு ஜூலை 31 வரை, ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. இதேபோல, ஆதார் அட்டையை, பான் எண்ணுடன் இணைப்பதற்கான கால வரம்பையும் மத்திய அரசு நீட்டித்துள்ளது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க, 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலையடுத்து, அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மத்திய அரசு முன்னதாக 2019-20ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் காலக்கெடுவை, 2020ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதிக்கு நீட்டித்தது.
மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) வெளியிட்ட அறிவிப்பின்படி, 2018-19 நிதியாண்டிற்கான (AY 2019-20) அசல் மற்றும் திருத்தப்பட்ட வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலம், 2020ம் ஆண்டு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2019-20 நிதியாண்டிற்கான (AY 2020-21) வருமான வரி வருமானத்திற்கான தேதி 2020 நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக, வரி செலுத்துவோரின் 1 லட்சம் வரை சுய மதிப்பீட்டு வரி செலுத்தும் தேதியும் 2020 நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிச் சட்டம், 1961 (ஐடி சட்டம்) ல் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் சுய மதிப்பீட்டு வரி முழுவதுமாக செலுத்தப்படலாம். தாமதமாக பணம் செலுத்துவது ஐடி சட்டத்தின் பிரிவு 234 ஏ இன் கீழ் வட்டி கட்ட வேண்டிய சூழலை ஏற்படுத்தும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தித்தொகுப்பு அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.