இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -5
(கி.பி 1299-1922)
துருக்கியில் ஒரு பகுதியில் ரோமர்களின் சிற்றரசாக, புருஷாநகரை தலைநகராக கொண்டஅரசு இருந்தது.
உஸ்மான் அவர்களின் அறிவுரைப்படி, இஸ்லாமிய குழுக்கள் ஐரோப்பிய நகரங்களுக்கு சென்று இஸ்லாமிய நெறிகளை பிரச்சாரம் செய்தது.
இதன் ஒரு குழுவை புருஷா சிற்றரசன் சிறைபிடிக்க அவர்களை மீட்க புருஷா நகரை நோக்கி உர்கான் தலைமையில் சென்ற படை கோட்டையை முற்றுகை இட்டது.
உலக வரலாற்றில் அதிசயமாக 10 ஆண்டு காலம் இந்த முற்றுகை நீடித்தது. உஸ்மானியர்களின் சிறுபடை எப்போதும் புருஷா கோட்டையை சுற்றி நின்றது.
10 வருடங்கள் தாக்குப்பிடித்த புருஷா சிற்றரசன் நகரிலிருந்து கோட்டையின் அரவமற்ற ஒரு பகுதியில் சுரங்கம் அமைத்து கொஞ்சம் கொஞ்சமாக மக்களை வெளியேற்றினான்.
இறுதியில் தானும் தனது குடும்பத்தினரும் தங்கம் வெள்ளி மற்றும் உயர்ந்த ஆபரணங்கள் என எடுத்துச்செல்லும் அளவிற்கு, பொருள்களோடு தனது மெய்காவல் படையோடு சுரங்கம் வழியாக தப்பி ரோமாபுரிக்கு சென்றுவிட்டான்.
ஒருநாள் இரவில் கோட்டையை வலம் வந்த உர்கான் ஒரு அரவமற்ற பகுதியில் விளக்குகள் ஊர்ந்து செல்வதை வைத்து கோட்டையிலிருந்து மக்கள் வெளியேறுவதை புரிந்து கொண்டு அதை தடுக்காமல் விட்டுவிட்டார்.
எல்லாம் முடிந்த பிறகு அதே சுரங்கம் வழியாக வீரர்களை உள்ளே அனுப்பி கோட்டை கதவுகளை திறந்து விட வைத்து நகருக்குள் உஸ்மானிய படை நுழைந்தது.
புருஷா நகரை எந்த சேதாரமும் இல்லாமல் உஸ்மானிய படை கைப்பற்றியது.
அதை அழகிய நகராக உர்கான் சீரமைத்தார். மாளிகைகள் கட்டப்பட்டன. சாலைகள் போடப்பட்டன.
அழகிய உஸ்மானிய தலைநகராக குறுகிய காலத்தில் “புருஷாநகரம்” உருவாக்கப்பட்டது.
இந்த இடைப்பட்ட காலத்தின் மன்னர் உஸ்மான் மரணமடைந்தார்.
உர்கான் அடுத்த உஸ்மானிய ஆட்சியாளராக பதவி ஏற்றார்.அவரின் பதவி ஏற்பில் உஸ்மானின் வாளை அணிந்து கொண்டார்.
தனது கோட்டையில் உஸ்மான் அவர்கள் பயன்படுத்திய கொடியை ஏற்றச் செய்தார் .
மங்கோலியர் களிடமிருந்து கோன்யா நகரம் கைப்பற்றப்பட்டது . பல சிற்றரசுகள் தானாக முன் வந்து உஸ்மானிய அரசின் கீழ் இணைந்து கொண்டன.
இணையாத சிற்றரசுகளை சிறிய படைகளை அனுப்பி வென்று உஸ்மானிய அரசோடு உர்கான் இணைத்துக் கொண்டார்.
மங்கோலியர்கள் ஒரு பகுதியை வென்று ஆட்சி செய்யாமல் அப்படியே விட்டு விட்டு அடுத்த பகுதிக்கு நகர்ந்து விடுவார்கள்.
இப்படியே மத்திய ஆசியாவின் பல பகுதிகள் மன்னரும் ஆட்சியும் இல்லாமல் தவித்தன.
மத்திய ஆசியப் பகுதிகளில் குழப்பங்கள் நிலவியது. இதனை சரியாகப் பயன்படுத்தி கொண்ட மறைந்த மன்னர் உஸ்மான் அவர்கள் மிகப் பெரிய உஸ்மானிய பேரரசை நிறுவ அடித்தளம் இட்டார்.
அதனை சரியாக மன்னர் உர்கானும் பயன்படுத்தி தனது எல்லைகளை விரிவாக்கினார்.
உஸ்மானின் மூத்தமகன் அலாவுதீனே பட்டத்து இளவரசராக முடி சூடவேண்டும்.
ஆனால் இளைய மகன் உர்கான் எப்படி மன்னராக முடிந்தது? அதன் ரகசியங்கள் என்ன?
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
You must be logged in to post a comment.