இராமநாதபுரம், ஜன.11- இராமநாதபுரம், முதுகுளத்தூரில் பொதுவிநியோகத் திட்டம் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருள் பரிசு தொகுப்பு விநியோகப் பணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் செயலரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான அர்ச்சனா பட்நாயக் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இராமநாதபுரம் செட்டிய தெரு, சேதுபதி நகர், மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சி பாரதி நகர் நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, வேட்டி சேலை, ரொக்கம் ரூ.1000, முழு நீள கரும்பு வழங்கபடுவதை பார்வையிட்டார். பொங்கல் தொகுப்பு பெற வந்த பொதுமக்களிடம் தங்களுக்குரிய பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்கள் கிடைக்க பெறுவதன் விவரம் குறித்து கேட்டறிந்தார். முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதி நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொங்கல் பொருள் தொகுப்பு விநியோகத்தை பார்வையிட்டார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4,00,165 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருள் தொகுப்பை உரிய காலத்திற்குள் வழங்கும் வகையில் பணியாளர்களை நியமித்து வழங்க வேண்டுமென அலுவலர்களுக்கு குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் செயலரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் மனோகரன், நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஜோதிபாஸ், துணைப் பதிவாளர் கோவிந்தராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன், ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் துறை வட்டாட்சியர் தமீம் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.