இறை தூதர் இபுராஹிம் தியாகத்தை போற்றி கொண்டாடும் விதமாக முஸ்லிம்கள் ஒவ்வொரு ஆண்டும் துல்ஹஜ் பிறை 10ல் பக்ரீத் பண்டிகையை ஈகைத்திருநாளாக கொண்டாடி வருகின்றனர். நடப்பாண்டு இன்று( ஆக., 22) காலை 7 மணியில் இருந்து தக்பீர் முழக்கத்துடன் இராமநாதபுரம் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள், திறந்த வெளி மைதானங்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பள்ளிவாசல்களில் இமாம்கள் பக்ரீத் பண்டிகை சிறப்புகள் குறித்து சொற்பொழிவு(பயான்) நடத்துகின்றனர். தொழுகை நிறைவடைந்ததும் உலக அமைதி, மதநல்லிணக்கம் தொடர சிறப்பு பிரார்த்தனை(துவா) நடைபெற்று தொழுகை நிறைவடைந்தது. இதையடுத்து வீடுகளில் ஆடு, மாடு குர்பான் கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி உறவினர்கள், ஏழைகளுக்கு வழங்கப்படும். குவைத், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டு குர்பான் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், இராமநாதபுரம், இராமேஸ்வரம், பரமக்குடி, தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், மரைக்காயர்பட்டினம், இருமேனி, பிரப்பன்வலசை, புதுமடம், தர்காவலசை, பனைக்குளம், சித்தார்கோட்டை, கீழக்கரை, ஏர்வாடி, ஒப்பிலான், சின்னக்கடை, என்மனம்கொண்டான், பெருங்குளம், பெரியபட்டினம், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் உள்பட 200க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இராமநாதபுரம் நாகநாதபுரம் ரோடு வசந்தம் மகால் வளாகத்தில் தலைமை இமாம் மவுலவி.ஹனிஃப் ரஷாதி தலைமையில் ஹஜ் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் த.மு.மு.க., நகர் தலைவர் பரக்கத்துல்லா, நகர் செயலர் பெரோஸ் கான், பொருளாளர் சதக் தம்பி, மனிதநேய மக்கள கட்சி நகர் செயலாளர் மன்சூர் அலி, பொறுப்புக் குழு உறுப்பினர் புரூக்கான் அலி உள்பட ஏராளமான ஆண்கள், பெண்கள் தொழுகையில் கலந்து கொண்டனர். புத்தாடைகள் அணிந்து வந்த முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி ஈகை திருநாள் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். த மு மு க, இஸ்லாமிய பிரசார பேரவை நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.
You must be logged in to post a comment.