சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள காரைக்குடி அரசு சட்டக்கல்லூரி கட்டடத்திற்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி,கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் ஆகியோர் முன்னிலையில் துவங்கப்பட்டது. அப்போது பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான படிப்பாக சட்டப்படிப்பு விளங்கி வருகிறது. மகளிர் படித்து முன்னேற்றம் காணும் போது நாடும் முன்னேற்றமடையும். தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். அனைத்து படிப்பு பிரிவுகளிலும், மாணவர்களை விட அதிக அளவில் பெண்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். பெண்களின் முன்னேற்றத்திற்காக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற அரசாக விளங்குவதாக தெரிவித்தார். இந்த நிகழ்வில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் எதிர்கால தூண்களாக விளங்கிவரும் மாணவர்கள் அனைவரும் தரமான கல்வியை பெறவேண்டும் என்ற அடிப்படையில் எட்டா கனியாக இருந்த கல்வியை கிராமப்புற மக்களும் பெறவேண்டும் என்ற அடிப்படையில், தமிழகத்தில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். புதிதாகவும் பல்வேறு பாடப்பிரிவுகளில் கல்வி கற்றிடவும் வழிவகை செய்துள்ளார்கள். நாட்டின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், சட்டக் கல்லூரியின் தேவை அத்தியாவசியமானதாக திகழ்கிறது என்றார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் .எஸ்.மாங்குடி (காரைக்குடி), ஆ.தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), சட்டத்துறை செயலர் .எஸ்.ஜார்ஜ் அலெக்சாண்டர், சட்டக்கல்வி இயக்குநர் ஜெ.விஜயலெட்சுமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணாக்கர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.