நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் பல்வேறு விதிகளை விதித்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி பாஜகவினர் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாஜக தொடர்பான போஸ்ட்டரை அரசு பேருந்தில் ஒட்டமுயன்ற பாஜக பிரமுகரை தடுத்த பேருந்து ஓட்டுநர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
நெல்லை மேலப்பாளையம் குறிச்சி என்ற பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் அந்த பகுதியில் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் இவர் வழக்கம்போல் நெல்லை டவுணில் இருந்து மணப்படை வீடு செல்லும் அரசு பேருந்தில் பணியில் இருந்தார். அப்போது நெல்லை பாளையங்கோட்டை அடுத்த திம்மராஜபுரம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் பேருந்தில் ஏறிக்கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் மருதுபாண்டி என்பவர், பாஜகவின் விளம்பரத்தை பேருந்தின் வாசலில் ஒட்டியுள்ளார். பின்னர் பேருந்தின் முன்பக்க கண்ணாடியிலும் ஒட்ட முயன்றுள்ளார். இதனை கண்ட அந்த பேருந்தின் நடத்துநர், அரசு பேருந்தில் அரசியல் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என்று கண்டித்துள்ளார்.
தொடர்ந்து போஸ்டர் ஒட்ட முயன்ற பாஜக பிரமுகரையும் தடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பாஜக பிரமுகர் மருதுபாண்டி, நடத்துநரை ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். இவரது பேச்சால் கோபமடைந்த
பேருந்து ஓட்டுநர் சுப்பரமணியனும் வர அனைவருக்குள்ளும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாய் தகராறில் ஆத்திரமடைந்த பாஜக பிரமுகர் மருதுபாண்டி, அருகில் இருந்த கடையில் உள்ள சோடா பாட்டிலை எடுத்து ஓட்டுநர் சுப்பிரமணியன் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில் இரத்தம் வழிய, வலியில் துடிதுடித்து கத்தியதையடுத்து பயந்துபோன பாஜக பிரமுகர் அந்த இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட ஓட்டுநர் சுப்பிரமணியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பாஜக பிரமுகர் மருதுபாண்டி மீது காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் மருதுபாண்டி மீது கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தப்பியோடிய மருதுபாண்டியையும் அதிரடியாக கைது செய்தனர்.
You must be logged in to post a comment.