தூத்துக்குடியில் நில மோசடி புகாரில் ஈடுபட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் குமரேசன் (த.கா.எண் :1318) கையெழுத்திட்ட ஆவணங்களை தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப தூத்துக்குடி இரண்டாம் எண் குற்றவியல் நீதித்துறை நடுவர் பிஸ்மிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள கோமஸ்புரம் பகுதியில் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான பொதுமக்கள் பயன்படுத்தும் கதிர் களம், மற்றும் மாட்டு மந்தை ஆகியவற்றை அப்போது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக இருந்த குமரேசன் என்பவர் (தற்போது எப்போதும் வென்றான் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக உள்ளார்) போலியாக பட்டா உருவாக்கி போலி ஆவணங்களை தயாரித்து வீட்டுமனை பிளாட்டுகளாக விற்று வருவதாகவும், தட்டிக் கேட்ட பொது மக்களையும், தன்னையும் “நான் போலீஸ்காரன் என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது” என மிரட்டுவதாகவும் அருள் பாலமுருகன் என்பவர் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 468,471,506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் 08.01.2014ல் வழக்கு பதியப்பட்டது.
இதனடிப்படையில் அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த துரை, உத்தரவின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் குமரேசன் சஸ்பென்ட் செய்யப்பட்டார். பின்னர் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. அந்த வழக்கு தூத்துக்குடி இரண்டாம் எண் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் இறுதி குற்ற அறிக்கை தாக்கல் செய்ய போலீஸ் தரப்பில் தாமதப் படுத்துவதாக கூறி அருள் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 04.07.2014 ல் நான்கு மாதத்திற்க்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. பின்னர் ஜூலை 2016 ஆம் ஆண்டு இரண்டாம் எண் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அப்போது ஆவணங்களை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பாமல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆகவே அதனை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பவேண்டும் என அருள் பாலமுருகன் நீதி மன்றத்தில் கோரிக்கை வைத்தார். இதை அப்போது நீதித்துறை நடுவர் நிராகரித்தார். இதனை எதிர்த்து அருள் பாலமுருகன் உயர்நீதிமன்றத்தை நாடினார் ,வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, “அரசு ஊழியர் மீதான இந்த குற்றசாட்டு கடுமையாக விசாரிக்கப் படவேண்டியது என்பதால் , மிகவும் வழக்கு விசாரணைக்கு தடயவியல் ஆய்வு அவசியமானது,ஆகவே ஆவணங்களையும் விரல் ரேகை பதிவுகளையும் தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்” என உத்தரவிட்டது
இதனையடுத்து உயர்நீதி மன்ற உத்தரவை ஏற்று தூத்துக்குடி இரண்டாம் எண் குற்றவியல் நடுவர் பிஷ்மிதா, வழக்கறிஞர் தொல்காப்பியனை ஆணையராக நியமித்து சிறப்பு ஆய்வாளர் குமரேசனின் கையெழுத்து, கைரேகை மற்றும் ஆவணங்களையும் தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
You must be logged in to post a comment.