ராமநாதபுரம், ஆக.25 – ராமநாதபுரம் மாவட்டத்தில் 181 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு 4 ஆயிரம் நாட்டுப்படகுகள், ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. 130 மீனவர் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் உள்பட 1.25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். மீனவ மகளிருக்கு ரூ.1,500 பங்களிப்பு தொகையுடன் மத்திய, மாநில அரசுகள் சார்பில் தேசிய மீனவர் சேமிப்பு நிவாரணம், மீனவர்களுக்கு தேசிய சேமிப்பு நிவாரணம், ஏப்.15 – ஜூன் 15 வரை 2 மாத மீன்பிடி தடைக்கால நிவாரணம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மீன்பிடி தொழில் சார்ந்த நலத்திட்ட உதவி, மாற்று வருவாய் ஈட்ட கடற்பாசி வளர்ப்பில் ஈடுபடும் மீனவ குடும்பங்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக பிரதமரின் கிசான் திட்டத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி சார்ந்த தொழில் செய்யும் பொருட்டு மானியக் கடன் வழங்க விண்ணப்பம் பெறும் சிறப்பு முகாம், மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை சார்பில் இன்று நடந்தது. இதில் மண்டபம் பாரம்பரிய மீனவர் கூட்டுறவு சங்கம், களஞ்சியம் நகர் மீனவர் கூட்டுறவு சங்கம், வடக்கு மீனவர் கூட்டுறவு சங்கம், தெற்கு மீனவர் கூட்டுறவு சங்கம்,மீனவ மகளிர் கூட்டுறவு சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு விண்ணப்பம் அளித்தனர். எந்தெந்த தொழில்களுக்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார், கடன் தொகையை வங்கி நிர்ணயிக்கும் காலத்தில் தவணை தவறாமல் திரும்ப செலுத்துதல், வட்டி விகிதம் குறித்து வங்கி மேலாளர்கள் சத்யபிரியா (பரோடா வங்கி), தாமோதரன் (பேங்க் ஆப் இந்தியா) ஆகியோர் விளக்கம் அளித்தனர். கவுன்சிலர் முருகானந்தம், களஞ்சியம் நகர் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் செல்வகுமார், தெற்கு மீனவர் கூட்டுறவு சங்க இயக்குநர் கஜேந்திரன், பாரம்பரிய மீனவர் கூட்டுறவு சங்க இயக்குநர் ஜாகீர் உசேன் மீனவ மகளிர் கூட்டுறவு சங்க தலைவர் பஞ்சா உள்பட பலர் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.