Home செய்திகள் தமிழக மீனவர் 28 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையை கண்டித்து அக்.18ல் போராட்டம்..

தமிழக மீனவர் 28 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையை கண்டித்து அக்.18ல் போராட்டம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம். அக்.15- எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக தமிழக மீனவர் மீனவர் 28 பேரை,  5 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. இதனால் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்து, அக்.18ல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்குச் சென்றனர். தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே நேற்று மதியம் மீன்பிடித்துக் கொண்டிருந்த TN 10 MM 56 – தங்கச்சிமடம் சர்புதீன் படகிலிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் குணசேகரன் 45, ராமநாதன் 35, பாலு 50, கண்ணன் 30, TN 10 MM 237 – தங்கச்சிமடம் பாஸ்கர் பெர்னாண்டோ படகிலிருந்த மீனவர்கள் ஜஸ்டின் 43, மோபின் 21, பெரிஸ்டன் 23, பிபின் ராஜ் 44, ஜெர்மன் சத்ராக் 22, ராபின்சன்19, சகாய பெங்கர் 32, அருள்தாஸ் 53,  ஆகியோரை 2 படகுகளுடன் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கச்சத்தீவு – நெடுந்தீவு இடையே நேற்று மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த TN 10 MM 708 – தங்கச்சிமடம் லிடன் படகிலிருந்த மீனவர்கள் ரீகன் 37, கார்த்திக் 24, முருகன் 31, மரிய ஜார்ஜ் 47, TN 10 MM 970 – தங்கச்சிமடம் கென்னடி என்பவரது படகில் இருந்த மீனவர்கள் சந்தியா ஸ்டூவர்ட் 26, பைனகாஷ் 19, கிளின்டன் 30, மிதுன் 27, பிரீமன் 30, ஜீவன் சன் 29, கெச்சோரியன் 30, கோட்டைபட்டினத்தில் இருந்து தொழிலுக்குச் சென்ற  மண்டபம் பதிவெண் கொண்ட TN 11 MM 726 – தங்கச்சிமடம் மரியவாசிங்டன் படகிலிருந்த மீனவர்கள் மரியவாசிங்டன் 49, வாழமுத்து 66, சக்திவேல் 59, பாலுச்சாமி 68  என 3 படகு அதிலிருந்த 13 மீனவரை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக  இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து  காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் 13 மீனவர்களை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இன்று அதிகாலை  ஒப்படைத்தனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரே நாளில் 5 விசைப்படகு, 28 மீனவரை சிறை பிடித்த இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். அக்.18ல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com