பறவைகளை வேட்டையாடி விற்ற 4 பேருக்கு ரூ 1.75 லட்சம் அபராதம்: வனத்துறை நடவடிக்கை..

இராமநாதபுரம், நவ.20 – ராமநாதபுரம் அண்ணா நகரில் வன உயிரினங்கள் விற்கப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது இதன் படி ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா வழிகாட்டல் படி ராமநாதபுரம் வனச் சரக அலுவலர் நித்யகல்யாணி மற்றும் வனப் பணியாளர்கள் ரோந்து சென்றனர். அப்போது 

அப்பகுதியில் 34 ஊசி வால் பெண் வாத்து, புள்ளி மூக்கு படி வாத்து, சின்ன அரிவாள் மூக்கன் ஆகிய பறவை இனங்களை வியாபாரம் செய்து கொண்டிருந்த சுல்தான் என்பவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இப்பறவைகளை, வேட்டையாடி பிடித்து வைத்திருந்தோரிடம் விலைக்கு வாங்கி வந்ததாக கூறினார். இதன்படி அங்கு விரைந்த வனத்துறையினர் அருண் பாண்டியன் 28, சத்யராஜ் 26, சாத்தையா 42 ஆகியோரை பிடித்தனர். பறவை இனங்களை வேட்டையாடியதாக ஒப்புக்கொண்டனர். சிக்கிய 4 பேரு க்கு, ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்து, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த பறவைகளை ராமநாதபுரம் சக்கரக்கோட்டை சரணாலயத்தில் பறக்க விட்டனர்.