தேர்தல் திருவிழா-தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி.மைதானத்தில் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ்.இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 30.03.19 இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் பூதமுத்துராமலிங்கம், காவல்துறை உயர் அதிகாரிகள்,அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள்,சமூக ஆர்வலர்கள், சமூக சேவை அமைப்பினர்கள், ஜனநாயக மாண்புகள் என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதிவந்த பொதிகை தமிழ்ச்சங்கம் கவிஞர்.பேரா உட்பட பொதுமக்கள்,பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு நேர்மையாக வாக்களிப்பதை உறுதிபடுத்தும் வண்ணம் உறுதி மொழி ஏற்று பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
சுதந்திர தின விழா, குடியரசு தின விழா இன்னும் புத்தகத் திருவிழா என பல விழாக்கள் நடந்திருந்தாலும் இன்று நடைபெற்ற விழா வ.உ.சி மைதானத்திற்கு புதியதும் புதுமையானதும் பெருமை சேர்க்கக் கூடியதுமாகும். தேர்தல் விழிப்புணர்வுக்காக ஒரு பிரமாண்டமான விழா,கலை நிகழ்ச்சிகள்,ராட்சச பலூன் விடுதல் , கையெழுத்து இயக்கம், வாக்காளர் (மனித)சங்கிலி என பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வை ஊரக வளர்ச்சித் திட்ட மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் இணைந்து சிறப்பாக நடத்தினர். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் “sveep”(systematic voter’s education and electoral participation) தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ்.இ.ஆ.ப அவர்கள் நெல்லை மாவட்டத்தில் மிகச்சிறப்பாக நடைமுறைபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தனது இரு குழந்தைகளோடு கலந்து கொண்ட நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய திருமதி.முத்தமிழ் பார்வதி,தொகுப்புரைகளுக்கிடையே பல இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை எடுத்தியம்பியது நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியது.
அர்ப்பணிப்பு உணர்வோடு தேர்தல் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அரசு அலுவலர்கள் குறிப்பாக வருவாய்த் துறை அலுவலர்களின் பணிகள் பாராட்டுக்குறியது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.