Home செய்திகள்உலக செய்திகள் ஒரு இலட்ச ரூபாய் நானோ கார் தயாரித்த மிகவும் ஆற்றல் மிக்க வர்த்தகர், பத்ம பூஷண் ரத்தன் டாட்டா பிறந்த தினம் இன்று (டிசம்பர் 28, 1937).

ஒரு இலட்ச ரூபாய் நானோ கார் தயாரித்த மிகவும் ஆற்றல் மிக்க வர்த்தகர், பத்ம பூஷண் ரத்தன் டாட்டா பிறந்த தினம் இன்று (டிசம்பர் 28, 1937).

by mohan

ரத்தன் நவால் டாட்டா (Ratan Naval Tata) டிசம்பர் 28, 1937ல் மும்பையின் வளமும் புகழும் மிகுந்த டாட்டா குடும்பத்தில் ரத்தன் டாடா பிறந்தார். அவர் சூனு மற்றும் நவால் ஹார்முஸ்ஜி டாட்டா ஆகியோரின் மகனாகப் பிறந்தார். ரத்தன், டாட்டா குழும நிறுவனர் ஜாம்செட்ஜி டாட்டா வின் கொள்ளுப் பேரனாவார். ரத்தனின் குழந்தைப்பருவம் இடர்ப்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. 1940-ஆம் ஆண்டுகளின் இடையே அவரது பெற்றோர்கள் பிரிந்த போது அவருக்கு ஏழு வயதாகவும் அவரது இளைய சகோதரர் ஜிம்மிக்கு ஐந்து வயதாகவும் இருந்தது. அவரது அன்னை குடும்பத்திலிருந்து வெளியேறியபின், ரத்தனையும் அவரது சகோதரரையும் அவர்களது பாட்டியார் லேடி நவஜிபாய் வளர்த்தார். ரத்தன் டாட்டா, 1962 ஆம் ஆண்டில் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பிஎஸ்சி இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர், 1975 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் வணிகப் பள்ளியில் உயர் மேலாண்மை பட்டம் பெற்றார். ஜே.ஆர்.டி. டாட்டா வின் அறிவுரையின்படி, ஐபிஎம் நிறுவனத்தில் கிடைத்த வேலையை உதறி விட்டு அவர் 1962 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா குழுமத்தில் சேர்ந்தார். அவர் முதலில் டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்ற ஜாம்ஷெட்பூருக்கு சென்றார். அவர் பிற உடலுழைப்புப் பணியாளர்களுடன் (blue-collar employees) சேர்ந்து சுண்ணாம்புக்கல் வாருதல் மற்றும் சூளைகளைக் கையாளும் பணிகளைச் செய்தார்.

கூச்சம் நிறைந்தவரான ரத்தன் டாட்டா, சமூகக் கவர்ச்சி இதழ்களில் மிக அபூர்வமாகவே தோன்றுவார். பல ஆண்டுகளாக, மும்பை யின் கொலாபா மாவட்டத்தில், புத்தகங்களின் நெரிசல் மிகுந்த, நாய்கள் நிரம்பி வழியும் விடலைக் குடியிருப்பில் (bachelor flat) வாழ்ந்த அவர், வியக்கத்தக்க பெருந்தகையாக விளங்குகிறார். 1971 ஆம் ஆண்டில், மிக மோசமான நிதி நெருக்கடியில் இருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனி லிமிடெட் (Nelco) நிறுவனத்தின் பொறுப்பு இயக்குனராக ரத்தன் பொறுப்பேற்றார். நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்வதைத் தவிர்த்து, உயர் தொழில்நுட்பப் பொருட்களை உருவாக்க முதலீடுகளை அந்நிறுவனம் செய்ய வேண்டும் என்று ரத்தன் யோசனை கூறினார். வழக்கமான ஆதாயப் பங்குகளைக் கூட ஒழுங்காக வழங்காத நெல்கோ நிறுவனத்தின் நிதி நிலை வரலாற்றைக் கருத்தில் கொண்ட ஜேஆர்டி, இந்த ஆலோசனையை ஏற்பதில் தயக்கம் காட்டினார். மேலும், ரத்தன் பொறுப்பை ஏற்றபோது நெல்கோ நிறுவனம் நுகர்வோர் மின்னணு சாதனச் சந்தையில் 2 சதவீதப் பங்கும் விற்பனையில் 40 சதவீத இழப்பெல்லையும் கொண்டிருந்தது. ஆயினும், ஜே.ஆர்.டி., ரத்தனின் ஆலோசனைகளைப் பின்பற்றினார்.

1972 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், படிப்படியாக நெல்கோவின் சந்தைப் பங்கு 20 சதவீதத்தை எட்டியது. தனது இழப்புகளையும் அந்நிறுவனம் மீட்டெடுத்தது. ஆனால், 1975 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்ததுடன் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 1977 ஆம் ஆண்டில் தொழிற்சங்கப் பிரச்சினைகள் தோன்றின. எனவே, தேவை அதிகரித்தபோதும் அதற்கேற்ப உற்பத்தி பெருகவில்லை. இறுதியில் டாடாக்கள் தொழிற்சங்கங்களை எதிர்த்தனர். ஒரு வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஏழு மாதக் கதவடைப்பு நடந்தேறியது. ரத்தன், நெல்கோவின் அடிப்படைத் திறமைகளைத் தொடர்ந்து நம்பிக்கையுடன் ஆதரித்த போதும், அவரது முயற்சி தாக்குப்பிடிக்கவில்லை. 1977 ஆம் ஆண்டில், டாட்டா குழும வசமிருந்த எம்ப்ரஸ் மில்ஸ் துணி ஆலை, ரத்தனிடம் ஒப்படைக்கப் பெற்றது. அவர் அந்நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றபோது, அந்நிறுவனம் டாடா குழுமத்தின் நொடிந்த சில நிறுவனங்களுள் ஒன்றாக இருந்தது. ரத்தன் அதை மீட்டெடுத்ததுடன் ஆதாயப் பங்கும் அறிவித்தார். ஆயினும், குறைந்த தொழிலாளர் சார்புள்ள நிறுவனங்களிடமிருந்து வந்த போட்டியின் விளைவாக பல நிறுவனங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

எம்ப்ரஸ் ஆலையைப் போன்று அதிகமான தொழிலாளர் படைகளைக் கொண்ட, நவீனமயமாக்கலுக்கு மிகவும் குறைவாக செலவழித்த நிறுவனங்களும் அவற்றில் அடங்கும். நிறுவனத்தில் ஒரு சிறு முதலீட்டை மேலும் செய்ய வற்புறுத்தினார், ஆனால் அது போதவில்லை. முரட்டுத்தன்மை வாய்ந்த நடுத்தரப் பருத்தித் துணியையே எம்ப்ரஸ் ஆலை உற்பத்தி செய்தது. இவ்வகைப் பருத்தித் துணிக்கான சந்தை பாதிப்புக்கு உள்ளாகியதால், எம்ப்ரஸ் ஆலை அதிக இழப்புக்குள்ளாகியது. நீண்ட காலத்திற்கு நிதி உதவிகளை, குழுமத்தின் பிற நிறுவனங்களில் இருந்து மாற்றி வழங்க டாடாவின் தலைமையகமான பம்பாய் அவுஸ் விரும்பவில்லை. எனவே, சில டாடா இயக்குனர்கள், குறிப்பாக நானி பல்கிவாலா, ஆலையை மூட முடிவு செய்தனர். இறுதியில், 1986 ஆம் ஆண்டில், ஆலையை மூடினார்கள். அம்முடிவால் ரத்தனுக்கு மிகுந்த மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னாளில், ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், வெறும் ஐம்பது இலட்சம் ரூபாய் இருந்திருந்தால் எம்ப்ரஸ் ஆலையை சீராக்கி நடத்தியிருக்கலாம் என்று அவர் கூறினார்.

1981 ஆம் ஆண்டில், குழுமத்தின் மற்றொரு பங்குதார நிறுவனமான டாட்டா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனராக ரத்தன் பொறுப்பேற்றார். அந்நிறுவனத்தை, குழுமத்தின் செயல்திட்டங்களுக்கான சிந்தனைக் கொள்கலனாகவும், உயர் தொழில்நுட்ப வர்த்தகங்களுக்கான ஆக்க முயற்சிகளை மேற்கொள்ளும் நிறுவனமாகவும் மாற்றுவது அவரது பொறுப்பானது. 1991 ஆம் ஆண்டில், அவர் ஜே. ஆர். டி. டாட்டா விடமிருந்து குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். வயதானவர்களை வெளியேற்றி இளைய மேலாளர்களை நியமித்தார். அதன் பிறகு, டாட்டா குழுமத்தின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதில் அவர் பெரும் பங்காற்றினார். இன்று, இந்திய பங்குச் சந்தையில் உள்ள வணிக நிறுவனங்களில் மிக அதிகமான சந்தை முதலீடு உள்ளதாக டாட்டா குழுமம் திகழ்கிறது. ரத்தனின் வழி காட்டுதலில் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் பொது நிறுவனமானது. டாட்டா மோட்டார்ஸ் நியூ யார்க் பங்குச் சந்தை யில் பட்டியலானது. 1998 ஆம் ஆண்டில், டாட்டா மோட்டார்ஸ் அவரது சிந்தனையில் பிறந்த டாட்டா இண்டிகாவை அறிமுகப்படுத்தியது.

2007 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று, ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ், டாடா சன்ஸ் நிறுவனம், எஃகு மற்றும் அலுமினியம் தயாரிக்கும் ஆங்கிலோ-டச்சு நிறுவனமான கோரஸ் குழுமத்தைக் கைப்பற்றியது. இக்கைப்பற்றல் மூலம் ரத்தன் டாடா இந்திய வணிகக் கலாச்சாரத்தின் புகழ்பெற்ற ஆளுமையானார். இந்த இணைப்பு உலகிலேயே ஐந்தாவது பெரிய எஃகு உற்பத்தியாளரை தோற்றுவித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று, ரத்தன் டாட்டாவின் தலைமையில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர் நிறுவனத்தை ஃபோர்டு மோட்டார் நிறுவனத்திடமிருந்து வாங்கியது. முதலாம் தரமாக உலகமே போற்றும் பிரித்தானிய தர அடையாளங்களான ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர் ஆகிய இரண்டும் 1.15 பில்லியன் பவுண்டுக்கு (2.3 பில்லியன் டாலர்) விலை போனது இந்தியாவுக்கு பெருமை ஈட்டித் தந்தது. ஒரு இலட்சம் ரூபாய் விலையுள்ள ஒரு தானுந்தை மக்களுக்காக தயாரித்து விற்பது ரத்தன் டாட்டாவின் நீண்ட காலக்கனவாக இருந்தது. (1998 ஆம் ஆண்டில், தோராயமாக 2200 அமெரிக்க டாலர்கள்; இன்று 2000 அமெரிக்க டாலர்கள்)

2008 ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று புது தில்லியில் நடைபெற்ற மோட்டார் வாகனப் பொருட்காட்சியில் அந்த தானுந்தை அறிமுகப்படுத்தியதுடன் அவரது கனவு நனவானது. டாட்டா நானோ வின் மூன்று மாதிரிகளை காட்சிக்கு வைத்தார்கள். ஒரு இலட்சம் ருபாய் விலையில் ஒரு தானுந்தியை தயாரித்து தனது வாக்குறுதியை ரத்தன் டாட்டா நிறைவேற்றினார். அத்துடன், தான் வாக்களித்தபடி குறிப்பிட்ட விலையில் தானுந்தை உற்பத்தி செய்ததைக் குறிப்பிடும் வகையில் “ஒரு வாக்குறுதி ஒரு வாக்குறுதியே” என்றும் கூறினார். ஆயினும், காரின் விலை பின்னர் அதிகரித்துள்ளது. அண்மையில் மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில், நானோ உற்பத்திக்கான அவரது தொழிற்சாலைக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்தபோது, அம்மாநிலத்தை விட்டு வெளியேற அவர் எடுத்த முடிவை இந்திய வணிக ஊடகங்களும் ஆங்கிலம் பேசும் நடுத்தர வர்க்கமும் வரவேற்றன. ரத்தன் டாட்டா, புத்ததேப் பட்டாச்சார்ஜியின் தலைமையிலான இடதுசாரி அரசுடன் சேர்ந்துகொண்டு, மக்களை அவர்களது நிலத்தை விட்டு பலவந்தமாக வெளியேற்றுவதாக பானர்ஜி குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் சில காலம் இருந்தது சர்ச்சைக்குள்ளான பிறகு, ரத்தன் டாடா தனது குழுவினருடன் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று, அவர்களது ஒரு இலட்சம் ரூபாய் நானோ கார் திட்டத்தை அகமதாபாத் அருகே உள்ள சானந்துக்கு மாற்றினர். 2000 கோடி ரூபாய் (20 பில்லியன் ரூபாய்) முதலீட்டில், உலகின் மிக மலிவான கார், தற்காலிகமாக அமைந்த தொழிற்சாலையில் இருந்து குறித்த தேதியில் தயாரித்து வழங்குவோம் என்றும் அறிவித்தார். தொழிற்சாலையை அமைப்பதற்கு, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அவருக்கு இலவச நிலம் உள்ளிட்ட பெரும் சலுகைகளை வழங்கினார். மையப் பகுதியில் அமைந்துள்ள 1,100 ஏக்கர்கள் (4.5 km2) நிலத்தை விரைவாக ஒதுக்கீடு செய்ததற்காக மோடியை ரத்தன் டாட்டா பாராட்டினார், நிறுவனத்திற்கு மிகவும் அவசரமாக புதிய இடம் தேவைப்பட்டதால், மாநிலத்தின் நற்பெயரைக் கணக்கில் கொண்டு அம்மாநிலத்தை தேர்ந்தெடுத்ததாக கூறினார். நானோ தானுந்து, 2009 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று, பல மாதங்களுக்கு முன்னரே செய்த முன்பதிவுகளுடன், மிகுந்த கோலாகலத்திற்கிடையே வெளியானது. ரத்தன் டாட்டா (24/10/2016) மீண்டும் தலைவரானார்.

இந்தியாவில் பல்வேறு அமைப்புகளில் மூத்த பொறுப்புகளில் பணியாற்றும் ரத்தன் டாட்டா, வணிகம் மற்றும் தொழில்கள் குறித்த பிரதம மந்திரியின் மன்றத்திலும் உறுப்பினராக உள்ளார். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று மும்பையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்குப்பின், ரத்தன் டாட்டாவை இந்தியாவின் மிகவும் நன்மதிப்பு பெற்ற வணிகத் தலைவர் என்று குறிப்பிட்டு, அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று போர்ப்ஸ் இதழ் கருத்து வெளியிட்டது. மிட்சுபிஷி கார்பரேஷன், அமெரிக்க பன்னாட்டுக் குழுமம், ஜேபி மார்கன் சேஸ் மற்றும் பூஸ் ஆலன் ஹாமில்டன் ஆகிய அமைப்புகளின் பன்னாட்டு ஆலோசனை வாரியங்களின் உறுப்பினராக உள்ளமை, ரத்தன் டாட்டாவின் வெளிநாட்டுத் தொடர்புகளுள் அடங்கும். மேலும் அவர், RAND கார்பரேஷன், தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் அவர் கல்வி கற்ற, கார்நெல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் உள்ளார். தென்னாப்பிரிக்கக் குடியரசின் பன்னாட்டு முதலீட்டு மன்றத்தின் குழு உறுப்பினராகவும், நியூயார்க் பங்குச் சந்தையின் ஆசிய-பசிபிக் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் அவர் பணியாற்றுகிறார். கிழக்கு-மேற்கு மையத்தின் ஆளுகைக் குழுவிலும், RAND’s மையத்தின் ஆசிய-பசிபிக் கொள்கை மைய ஆலோசனைக் குழுவிலும் டாட்டா உறுப்பினராக உள்ளார். மேலும், அவர் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் இந்திய AIDS திட்டத்தின் குழுவிலும் பணியாற்றுகிறார்.

ஜனவரி 26, 2000 அன்று, 50 ஆவது இந்தியக் குடியரசு தினத்தையொட்டி, படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கும் மூன்றாவது பெரிய சிறப்புப் பதக்கமான பத்ம பூஷண் விருது, ரத்தன் டாட்டாவுக்கு வழங்கினார்கள். 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்க்ஜோவ் நகரத்தின் பொருளாதார ஆலோசகர் பட்டம் ரத்தன் டாட்டாவுக்கு வழங்கினார்கள். 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள, தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவிற்கு ரத்தன் டாட்டாவை தேர்ந்தெடுத்தார்கள். 2006 ஆம் ஆண்டில், பொறுப்புடைய முதலாளித்துவத்திற்கான FIRST விருது அவருக்கு வழங்கினார்கள். மார்ச் 2006 ஆம் ஆண்டில், பொருளாதாரக் கல்விக்காக ராபர்ட் எஸ். ஹாட்பீல்ட் பெல்லோ விருதினை வழங்கி, கார்நெல் பல்கலைக்கழகம் டாட்டாவை கௌரவித்தது. வணிகத் துறையில் சிறப்பு வாய்ந்த தனியருக்கு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இவ்விருது மிகப்பெரும் கௌரவமாகக் கருதப்படுகிறது.

2008 ஆம் ஆண்டிற்கான NASSCOM உலகத் தலைமை விருதுகள் பெற்றவர்களில் இவரும் ஒருவர். இவ்விருது 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று மும்பையில் வழங்கினார்கள். 2007 ஆம் ஆண்டு வழங்கிய, நற்பணிகளுக்கான கார்னகி பதக்கத்தை, டாடா குடும்பத்தின் சார்பாக, ரத்தன் டாடா ஏற்றுக்கொண்டார். 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பார்ச்யூன் இதழ் வெளியிட்ட மிகவும் ஆற்றல் மிக்க வர்த்தகர்கள் பட்டியலில் இவர் இடம் பெற்றார். 2008 ஆம் ஆண்டு மே மாதத்தில், டைம் இதழ் வெளியிட்ட, உலகின் மிக செல்வாக்குடைய நூறு பேர் அடங்கிய பட்டியலில் திரு டாட்டா இடம் பிடித்தார். டாட்டா, ஒரு இலட்ச ரூபாய் காரான நானோவை தயாரித்து வெளியிட்டதற்குப் பெரிதும் புகழப் பெற்றார். படைத்துறை சாராத ஒரு குடிமகனுக்கு வழங்கும் இரண்டாவது பெரிய சிறப்புப் பதக்கமான பத்ம விபூஷண் விருது, 2008 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று அவருக்கு வழங்கினார்கள். 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று சிங்கப்பூர் அரசாங்கம் கௌரவக் குடிமகன் தகுதியை ரத்தன் டாடாவுக்கு வழங்கியது. தீவு நாடான அதனுடன் தொடர்ந்த வணிக உறவையும், சிங்கப்பூரில் உள்ள உயர் தொழில்நுட்பத் துறைகளுக்கு அவரது பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் இதை வழங்கினார்கள். இந்த கௌரவத்தைப் பெறும் முதல் இந்தியர் ரத்தன் டாடா ஆவார். 2009 ஆம் ஆண்டில் அவர் மதிப்பார்ந்த பிரித்தானிய பேரரசின் வீரத் தலைவராக (honorary Knight Commander of the British Empire) நியமிக்கப்பட்டார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!