தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் . கிருஷ்ணசாமி இன்று மாலை (13.12.2018) கோரிக்கை மனு கட்சி நிர்வாகிகளுடன் மனு அளித்தார்.
இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரியிடம் மனு கொடுத்த பின்னர், கிருஷ்ணசாமி கூறுகையில், “ஆங்கிலேயர் காலத்தில் தவறுதலாக எஸ் சி என அழைக்கக் கூடிய பட்டியல் இன பிரிவில் சேர்த்து விட்டனர். அதன் விளைவாக கடந்த 90 ஆண்டுகளாக, நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் அதனுடைய பாதிப்பு தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு சமூக, அரசியல் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. எனவே தான் ஒட்டு மொத்த தேவேந்திர குல வேளாளர்களும் தங்களை பட்டியல் பிரிவில் இருந்து விலக்கி இதர பிற்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 320 கிராமங்களில் தேவேந்திர குல மக்கள் சார்பில் நிறைவேற்றிய தீர்மான நகலை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரியிடம் கொடுத்தேன்.
கடந்த 4 நாட்களாக தஞ்சையில் துவங்கி 10 மாவட்ட ஆட்சியர்களிடம் இந்த தீர்மான நகல் கொடுத்து வருகிறேன். இந்த கோரிக்கையை நிறைவேற்றக்கோரி புதிய தமிழகம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக ஏராளமான மாநாடு, பேரணி மூலமாக வலியுறுத்தி உள்ளோம். இக்கோரிக்கையை தமிழக அரசு உடனே நிறைவேற்றி தர வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வசதியாக தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க சென்னை பல்கலை., மானுடவியல் துறை தடையில்லை என அறிக்கை சமர்பித்துள்ளது. தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கவும், பட்டியல் பிரிவிலிருந்து நீக்கி இதர பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசிடம் பரிந்துரைக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
You must be logged in to post a comment.