Home செய்திகள் ரயில்வேயில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் எழுச்சிப் போராட்டம்…

ரயில்வேயில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் எழுச்சிப் போராட்டம்…

by ஆசிரியர்

ரயில் பயணத்தில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பல்வேறு கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சர் இடம் நேரில் வலியுறுத்தி 9 மாதமாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாடு முழுவதும் ரயில்வே கோட்ட அலுவலகங்கள் முன் போராட்டங்கள் நடத்திட ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை அறைகூவல் விடுத்திருந்தது.

அதன்படி டிச-11 அன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய கோட்ட அலுவலகங்களின் முன்பு எழுச்சிமிக்க போராட்டங்களை மாற்றுத்திறனாளிகள் நடத்தினர்.

அப்போது, ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்படி அரசு தரும் ஒரே அடையாள சான்றையே நாடு முழுவதும் எல்லாத்துறைகளும் ஏற்க வேண்டும், ரயில்வே நிர்வாகம் தரும் தனியான சான்றை வாங்கச்சொல்லி அலைக்கழிப்பதை நிறுத்த வேண்டும், முதியோர் ரயிலில் பயணம் செய்யும்போது மட்டும் பரிசோதகரிடம் சலுகைக்கான அடையாள சான்றை காண்பிக்கும் வசதி உள்ளது போன்று, மாற்றுத் திறனாளிகளுக்கும் வசதி செய்ய வேண்டும், இதன் மூலம் பயணச்சீட்டு வழங்கும் மைய ஊழியர்களால் அலைக்கழிப்பு செய்வது தடுக்கப் பட வேண்டும்.

ஊனமுற்றோர் புதிய உரிமைகள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள 21 வகை மாற்று திறனாளிகளுக்கும் சலுகை கட்டணம் அளிக்க வேண்டும். சுவிதா உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும், தட்கல் டிக்கட்டுகளிலும் ஒரே மாதிரியான 75 சதவீத கட்டண சலுகை அளிக்க வேண்டும், கீழ் படுக்கை ஒதுக்கீடுகளை மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகப்படுத்த வேண்டும், ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள், நடைமேடைகள், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் ஏற்ற வகையில் தடையில்லா சூழலை ஏற்படுத்த வேண்டும். இலகு ரக பெட்டிகள் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் மாற்றுத்திறனாளி பெட்டிகளை உறுதி செய்ய வேண்டும், ரயில்வே ஊழியர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ரயில்வே பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக வழங்க ரோஸ்டர் முறையை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். பின்னடைவு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் போன்ற ஏற்கனவே மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் நேரில் மனு அளித்து வலியுறுத்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை உடனடியாக தீர்க்க ரயில்வே துறையும், பிரதமர் மோடியும் முன்வர வேண்டுமென இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மேலும், ரயில்வே கோட்ட மேலாளர்கள் தலையிட்டு, ரயில் நிலைய பேட்டரி கார்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும், மாற்றுத்திறனாளி ரயில் பெட்டிகள் நிற்குமிடம், ஆகியன குறித்து நிலையங்களில் உரிய அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலைய அளவிலான கோரிக்கைகளை தீர்க்க, ரயில் நிலைய மேலாளர்கள் தலைமையில் சிறப்பு குறைதீர்குழுக்களை உருவாக்கி செயல்படுத்த கோட்ட மேலாளர்கள் உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டன.

போராட்டங்களின் ஒரு பகுதியாக கோட்ட ரயில்வே அதிகாரிகளை சந்தித்து ஏற்கனவே ரயில்வே அமைச்சரிடம் மனு நகல்களை மீண்டும் ரயில்வே அமைச்சருக்கே அனுப்பி வைக்கவும் வலியுறுத்தப்பட்டது. சென்னை கோட்ட அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் மாநில தலைவர் பா.ஜான்ஸி ராணி, துணை தலைவர் S.K.மாரியப்பன் உள்ளிட்டோரும், சேலம் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் எஸ. நம்புராஜன், மாநில பொருளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி ஆகியோரும், திருச்சியில் மாநில செயலாளர் பி.ஜீவா, பி.ஜெயபால் ஆகியோரும், மதுரையில் மாநில செயலாளர் டி. வில்சன், S.பகத்சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

செய்தியாளர்:அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!