வத்தலக்குண்டு அருகே ஆவணமின்றி பிடிபட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான,தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள்! கருவூலத்தில் ஒப்படைத்த வட்டாட்சியர் தனுஷ்கோடி…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே தேனி-மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வத்தலக்குண்டு சோதனை சாவடியில் பாராளுமன்ற தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் (SST) பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தேனியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி வந்த தனியார் நகை நிறுவன சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்ட போது, தங்க நகைகள் 9-பெட்டிகளிலும் வெள்ளி நகைகள் 3-பெட்டிகளிலும் இருந்ததை கைப்பற்றி சோதனை செய்தத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.
இதனை அடுத்து நிலக்கோட்டை தேர்தல் நடத்தும் துணை அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பூங்கொடி அவர்களின் உத்தரவின் பேரில், தேர்தல் பிரிவு மதுரை மண்டல வணிகவரித்துறையினர்,வருமானவரித்துறையினர் வரவழைக்கப்பட்டு நகைகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில் கோவையில் இருந்து தங்க நகைகளை நகைக்கடைகளுக்கு மொத்த வியாபாரத்திற்கு கொடுப்பதற்காக தேனி வந்ததாகவும், தேனியில் ஒப்படைத்து விட்டு வத்தலக்குண்டு நோக்கி வரும்பொழுது தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் (SST) சோதனையில் ஈடுபட்டு நகைகளை பறிமுதல் செய்தது தெரியவந்தது. பிடிபட்ட மொத்த நகைகளின் மதிப்பு ரூ 3,09,79,550 ஆகும். மேலும் முறையாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறாமல் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் நகைகளை விற்பனைக்கு எடுத்து வந்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாததாலும் உரிய ஆவணங்கள் இல்லாததாலும் நகைகளை துணை தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்னிலையில் நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி, நிலக்கோட்டை சார்நிலை கருவூலத்தில் கருவூல அதிகாரி ஜோதியிடம் ஒப்படைத்தார். பின்னர் முறையாக 9+3 நகைப் பெட்டிகளையும் இரண்டு மூட்டைகளாக பிரித்து மூடி முத்திரையிடப்பட்டு கருவூல காப்பக அறையில் வைத்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மூடி முத்திரையிடப்பட்டு (சீல்) வைக்கப்பட்டது.
3.10 கோடி மதிப்பிலான நகைகள் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரால் சரக்கு வாகனத்தில் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment.