மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா பேரிடர் நிவாரண நிதி ரூ.5000 உடனடியாக வழங்கக்கோரி அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம்- மாற்றுத்திறனாளிகள் அறிவிப்பு..
கொரோனா பேரிடர் சிறப்பு நிவாரண நிதி ரூ.5,000/- உடனடியாக வழங்கிடக்கோரி அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை வரும் 07.05.2020 அன்று நடத்தவிருப்பதாக திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அறிவித்துள்ளனர்.
கொரோனா பேரிடர் காரணமாக 3-வது கட்ட ஊரடங்கு தற்போது அமலுக்கு வந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள இந்த ஊரடங்கு காரணமாக மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்கள் விவரிக்க முடியாத துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். பசி, பட்டினியாலும், மருந்து மாத்திரைகள் வாங்க முடியாமலும், பிரத்யேக அவசர செலவுகளுக்கு கூட காசு இல்லாமலும் பல லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் அல்லல்படுகின்றனர்.
இந்த நிலை குறித்து மாநில முதலமைச்சருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் பல முறை TARATDAC மற்றும் மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் பல முறை விளக்கி மனுக்கள் அனுப்பியும், உயர் அதிகாரிகளுடன் பேசியும் எந்தப் பலனும் இல்லை என மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், ஊடகங்களில் மாற்றுத்திறனாளிகள் படும் கடுமையான துயரங்களை வெளியான போதிலும் அரசு கண்டு கொள்ளவில்லை. மாறாக, மாற்றுத்திறனாளிகள் படும் துயரங்களை மறைக்கும் விதத்தில், அரசு துவக்கியுள்ள சிறப்பு ஹெல்ப்லைன் மூலம் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்துள்ளதாக சமூகநலத்துறை அமைச்சரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் பொய்பிரச்சாரம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ள மாற்றுத்திறனாளிகள் இதனை கண்டித்துள்ளனர்.
வழக்கமாக சாதாரண காலங்களைப் போல் உதவித்தொகை கொடுப்பது, சிறுசிறு பொருள்கள் அளிப்பது என்பதைத் தவிர இந்த கொரோனா மற்றும் ஊரடங்கு காலத்தின் துயர் துடைக்க புதிதாக எவ்வித நிவாரணமும் அறிவிக்கவில்லை என்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. கொரோனா நோய் தொற்று ஆபத்தைக் கருதி ஒன்றரை மாதங்கள் பல துயரங்களை தாங்கிக்கொண்ட போதிலும், இதற்கும் மேல் உயிர்வாழ முடியாது என்றெல்லாம் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து அழுது புலம்பி புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க வேண்டிய அரசின் கடமையை செய்ய வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக மே-7 வியாழன் அன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி, ஒன்றிய, தாலுகா, மாவட்ட அலுவலகங்களில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளை திரட்டி குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்பதாக TARATDAC- மாற்றுத்திறனாளிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த போராட்டத்தின் போது நோய்தொற்று ஆபத்து கருதி சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் குடை பிடித்துக் கொண்டும், முகக்கவசம் கட்டாயம் அணிந்துகொண்டும் போராட்டம் நடைபெறும் என்பதாகவும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர்
S. பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.