Home செய்திகள் நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் நினைவு தினம் இன்று (மார்ச் 11, 1955).

நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் நினைவு தினம் இன்று (மார்ச் 11, 1955).

by mohan

சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) ஆகஸ்ட் 6, 1881 ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். அவரது இளமைக்கல்வி இயற்கையெழில் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைந்தது. அங்குதான் இயற்கையை ரசிக்கவும், எதையும் கூர்ந்து நோக்கி அறியவும் அவர் பயிற்சி பெற்றார். பின்னாளில் அவர் பெனிஸிலின் என்ற அற்புத மருந்தைக் கண்டுபிடிக்க இப்பயிற்சியே உதவி செய்தது. தொழில் நுட்ப கல்லுாரி படிப்பை முடித்தபிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில் அவர் அலுவலராகச் சேர்ந்தார். எழுத்தர் பணி அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து கிடைத்த சொத்து, அவர் மிகத் தாமதமாக தனது 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர வழி செய்தது. மிக இளம் வயதிலேயே தந்தையை இழந்த இவர், வாழ்க்கையில் பல துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. தூய மேரி மருத்துவப்பள்ளியில் படிக்கும்போதே மிகச் சிறந்த மாணவராக பிளெமிங் திகழ்ந்தார். மருத்துவப் படிப்பின் பல்வேறு பிரிவுகளிலும் தன் அறிவுக்கூர்மையை வெளிப்படுத்திப் பல பரிசுகளை வென்ற பெருமை அவருக்குண்டு. மருத்துவப் பட்டம் பெற்ற பின்னர் அல்ம்ரோத் ரைட் (Almroth Wright) என்ற நுண்ணுயிரியல் ஆசிரியரிடம் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார்.

பிளெமிங் எப்போதும் புத்தகப்புழுவாக மட்டுமே இருந்ததில்லை. மருத்துவம் தவிர்த்த பல்வேறு துறைகளிலும் அவருக்குப் பெரும் ஈடுபாடு இருந்தது. நீச்சலிலும், போலோ விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தனது ஆசிரியர் ரைட் அவர்களின் வழிகாட்டுதலில், டைபாய்டு காய்ச்சலுக்கான தடுப்பூசி போடும் முறையை பிளெமிங் கண்டுபிடித்தார். இதற்குச் சற்று முன்னர்தான் லூயி பாஸ்டர் கால்நடை களுக்கான தடுப்பூசி போடும் முறையை அறிமுகப்படுத்தி இருந்தார். இந்நிலையில் நோய்த் தடுப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு கிளர்ச்சியுறாத நச்சுயிரிகளைத் (inactivated virus) தடுப்பூசி வழியே செலுத்துவதற்கு ரைட் அவர்கள் முயற்சி செய்தார். ரைட் அவர்களின் மாணவரான பிளெமிங், குருதியின் வெள்ளை அணுக்களில் ஆய்வு மேற்கொண்டார். இவ்வெள்ளை அணுக்கள் நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன.

ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக் ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு. நான்கு ஆண்டுகள் நடந்த முதல் உலகப்போரில் ரைட் குழுவினரின் தடுப்பூசி மட்டும் பயன்படுத்தப்பட்டிரா விட்டால், ஆயிரக்கணக்கானோர் டைஃபாய்டு காய்ச்சலுக்கு பலியாகியிருப்பார்கள். போரில் காயமடைந்த வீரர்களுக்கு கார்பாலிக் அமிலம், போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்ற நச்சுமுறி மருந்துகளையே அக்காலத்தில் பயன்படுத்தி வந்தனர். இந்த மருந்துகள் சிகிச்சைக்கு உதவாததோடு, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து மேலும் பலர் இறப்பதற்கே வழிவகுத்தன என்று ஃப்ளெமிங்க் நிரூபித்தார். குறைபாடற்ற நச்சுமுறி மருந்தைக் கண்டுபிடிப்பதில் அவர் கவனம் திரும்பியது. நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.

பல்வேறு வகை நுண்ணுயிர்களை தட்டுகளில் வளர்த்து அவற்றின் இயக்கங்களை அவர் ஆராயத் தொடங்கினார். தனது மூக்கிலிருந்து ஒழுகிய நீரிலிருந்தே ஓரிரு சொட்டுகள் எடுத்து பாக்டீரியாக்கள் அடங்கிய தட்டில் வைத்து வளர்த்தபோது, சளித்திரவத்தைச் சுற்றியிருந்த பாக்டீரியாக்கள் மட்டும் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். இதேபோல் கண்ணீர், உமிழ் நீர், சீழ் போன்ற உடலில் சுரக்கும் பல திரவங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். இந்த திரவங்கள் அனைத்திற்கும் நோய்க்கிருமிகளை வளராது தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டார். இயற்கையிலேயே அமைந்த இந்த நச்சு முறிபொருளுக்கு ‘லைசோசைம்’ எனப் பெயரிட்டார். 1928ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் அதுவரை செய்திராத ஒரு செயலை காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளை காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும், வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார்.

காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங். ஆனால் பெனிசிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். பெனிசிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வேறு பாதுகாப்பான நச்சுக்கொல்லி மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அக்குழுவினர் வெற்றியடைந்தனர். 1945ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங், ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகிய மூவருக்கும் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் 1944 ஆம் ஆண்டில் நைட் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 1999 ஆம் ஆண்டில் டைம் சஞ்சிகையால் வெளியிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் உள்ளடக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு நிறைவுறும் தறுவாயில் சுவீடனிலிருந்து வெளிவரும் பிரசித்திபெற்ற மூன்று சஞ்சிகைகள் பென்சிலினை கடந்த ஆயிரமாண்டு காலத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக அறிவித்தன.

2002 ஆம் ஆண்டில் பிபிசியால் மக்களின் வாக்களிப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரித்தானியாவின் முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் உள்ளடக்கப்பட்டார். அலெக்சாண்டர் பிளெமிங்கின் ஞாபகார்த்தமாக சிறுகோள் படையிலுள்ள ஒரு சிறுகோளுக்கு 91006 பிளெமிங் எனப் பெயரிடப்பட்டது. நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் மார்ச் 11, 1955ல் தனது 73வது அகவையில் லண்டன், இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!