இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி நாடாளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 10.3.2019 முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. 23.5.2019 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அமலில் இருந்த தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (26.5.2019) தளர்த்தி உத்தரவிட்டது.
இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 87 நாட்களுக்கு பின் மக்கள் குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தலைமையில் இன்று (27.5.2019) நடந்தது.
இக்கூட்டத்தில்,2018 நவம்பர் 28 முதல் இலங்கை சிறையில் வாடும் ராமேஸ்வரம் மீனவர்கள் ராமு, முத்துராமலிங்கம் வர்க்கீஸ், தங்கவேல் ஆகியோரை மீட்டு தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனு அளித்தனர். மேலும், குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் மனு கொடுத்தனர்.
குறை தீர் நாள் கூட்டத்திற்கு வந்த மாற்றுத்திறனாளிகளின் இருக்கைக்குச் சென்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கோரிக்கை மனுக்கள் பெற்றுக் கொண்டார். கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்க அந்தந்த துறை அலுவலர்களிடம் ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுறுத்தினார். சுய தொழில் தொடங்க உதவக் கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி க்கு இலவச தையல் இயந்திரம் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி உடனிருந்தார்.
You must be logged in to post a comment.