எந்த மாற்றமாக இருந்தாலும் அது நம்மில் இருந்து வர வேண்டும் அப்போது தான் அது உண்மையான மாற்றாமாக இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் காயல்பட்டிணத்தை சேர்ந்த கறிக்கடைக்காரர்கள் செய்து காட்டி உள்ளனர். மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை ஏற்பட்டுள்ள சூழலில் அந்த தடை அமலுக்கு வரும் முன்கூட்டியே பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பனை ஓலையில் இறைச்சியை வைத்து வியாபாரத்தை தொடங்கிய கறிக்கடைக்காரர் சங்கர். பிளாஸ்டிக் பைகளை காட்டிலும் பனை ஓலை விலை அதிகம் என்றாலும் பிளாஸ்டிக்கை ஒழிக்க இதுவே நல்ல தருணம் என்று அவர் கூறுகிறார். அதனை தொடர்ந்து அதே ஊரில் இறைச்சி வியாபாரம் செய்து வரும் தர்வேஷ் பனை ஓலையை பயன்படுத்துகிறார்.
(காயல்பட்டிணம் சதுக்கை தெரு பகுதியில் சென்ட்ரல் ஸ்கூல் அருகில் இறைச்சி வியாபாரம் செய்து வரும் தர்வேஷ்-வீடியோ காட்சி)
இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. சுமார் 20 வருடங்களுக்கு முன்னதாக பனை ஓலையை பல்வேறு தேவைகளுக்கும், உணவு உண்பதற்கும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
பனை மரங்கள் அழிக்கப்பட்டு வருவதால் நாளடைவில் இந்த பயன்பாடு மெல்ல குறைந்து விட்டது. ஆனால் இன்னமும் பனை ஓலையை மடித்து உணவு உண்பதற்காக பிக்னிக் செல்பவர்கள் பயன்படுத்துவது வழமையாக உள்ளது. அதில் உண்ணும் உணவின் ருசியோ தனி ருசி என்று சொல்லும் அளவுக்கு ஓலை பட்டைக்கு தனி மவுசு இன்றளவும் உள்ளது. அதில் மருத்துவ குணமும் நிறைந்துள்ளது.
இன்றைய அவசர உலகத்தில் இயற்கையை மறந்து செயற்கையை நோக்கி நகர்ந்து செல்லும் நாம் மீண்டும் அந்த பசுமையான வாழ்வை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகவும், அதுவே ஆரோக்கியத்தின் ஆணி வேராகவும் இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
You must be logged in to post a comment.