இலங்கை கடற்படையினர் கைது செய்த தமிழக மீனவர் 4 பேரை விடுவிக்க ராமநாதபுரம் எம்.பி., கே.நவாஸ்கனி, மக்களவையில் வலியுறுத்தினார். இது குறித்து இன்று மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்பி நவாஸ்கனி பேசியதாவது: ஜூன் 26 ஆம் தேதி எனது தொகுதியான ராமநாதபுரம், ராமேஸ்வரம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர் 4 பேர் செல்வராஜ், நம்புவேல், செல்வராசு, மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.
உராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன்பிடித்த அவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மீன்பிடி படகுகள், இதர உபகரணங்களைஇலங்கை கடற்படையினர் கைப்பற்றிஅழித்து விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் அந்த 4 மீனவரின் அடிப்படை வாழ்வு ஆதாரம் சிதைக்கப்பட்டுள்ளது.இராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லும் பொழுதெல்லாம் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சித்ரவதை “துன்புறுத்துவது, படகுகளை சேதப்படுத்துவ பல ஆண்டு காலமாக அரங்கேறி வருகிறது. கச்சத்தீவு பிரச்னை நிரந்தர தீர்வுக்கு வராத நிலையில், மீன் பிடி உரிமையை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இந்திய மீனவர்கள் துயருற்று வருகின்றனர். எனவே கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு முனைப்பு காட்ட வேண்டும். கச்சத்தீவு பகுதி ராமநாதபுரம் மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது என்பதை ஆவணங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
1974 ஆம் ஆண்டு வரை கச்சத்தீவு, இந்திய அரசின் அதிகார எல்லைக்குள் இருந்தது. இந்திய அரசியல் சாசன விதிமுறைகளை முறைப்படித் திருத்தி அமைப்பதன் மூலம் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்து இருக்க முடியும்.
ஆனால் இத்தகைய நடைமுறை எதுவும் நிகழவே இல்லை. எனவே கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்டு நாம் தக்க வைப்பதற்கான வழிகள் தெளிவாகவே உள்ளன. இந்திய வெளி விவகாரத்துறை அமைச்சர் உடனே இதில் கவனம் செலுத்த வேண்டும். இலங்கை சிறையில் வாடும் ராமேஸ்வரம் மீனவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவர வேண்டும். மீன்பிடி படகுகள் மற்றும் இதர உடைமைகளை இலங்கை கடற்படையினரிடம் இருந்து மீட்கப்பட வேண்டும்.
கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இத்தகைய துன்பங்களைத் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். அவற்றில் இருந்து அவர்களை மீட்பதற்கு ஏற்ற வகையில் உரிய புதிய உபாயங்களை இந்திய அரசு கண்டுபிடித்து நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும். இவாறு அவர் தெரிவித்தார்.
You must be logged in to post a comment.