மதுரை மாவட்டத்தில் அதிக பயணிகளை ஏற்றி ஆபத்தான முறையில் ஆட்டோக்கள் பயணம்..
மதுரை மாவட்டத்தில், பல ஊர்களில் ஆட்டோக்கள் மினி பஸ்களாக செயல்படுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை நகரில் பல இடங்களில் பஸ் நிறுத்தங்கள் அருகே பயணிகள் பஸ்ஸில் பயணிக்க முடியாத நிலையில், படிக்கட்டு அருகே நின்று இடையூறு செய்து வருகின்றனர் ஆட்டோ டிரைவர்கள். மேலும் ,அதிக அளவில் பயணிகளை ஏற்றி ஆட்டோக்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனராம்.
மதுரை நகரில் கோரிப்பாளையம், அண்ணா நகர், கருப்பாயூரணி, சிம்மக்கல், ஆரப்பாளையம், புதூர், அண்ணா நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோ டிரைவர்கள் நின்று கொண்டு, பயணிகளை கூவி கூவி ஏற்றி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக் கொண்டு, பயணங்களை மேற்கொள்கின்றனர். அத்துடன், சாலை விதிகளை மதிக்காமல், பயணம் செய்வதாக பொதுமக்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக, பல புகார்கள் மதுரை காவல் போக்குவரத்து துணை ஆணையர், உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், போக்குவரத்து ஆய்வாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோருக்கு கவனத்துக்கு சென்றும், இதுவரை அதிக பயணிகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் மற்றும் சாலை விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்களை, தடை செய்ய அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. மேலும், மதுரை புறநகர் மாவட்டமான, மேலூர், திருமங்கலம், வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பள்ளி மற்றும் பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோக்களை, வரிசையாக நிறுத்திக் கொண்டு, பஸ்ஸுக்கு பயணம் செய்யும் பயணிகள் பஸ் படிக்கட்டில் ஏற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆகவே, மதுரை மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆட்டோக்களுக்கு பெர்மிட் விட்டு வழங்குவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மதுரை நகரில் மற்றும் புறநகரில் பல ஆட்டோக்கள் பெர்மிட் காலாவதியாக இயக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதுகுறித்து, மதுரை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அவ்வப்போது, ஆய்வு செய்து பெர்மிட் இன்றி, இயக்கப்படும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.