சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய சட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும்-மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்தல்..
கோவையில் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பின்பு மமக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,என்.பி.ஆர் எந்த விதத்திலும் உதவி செய்யாது. இதை வைத்து காழ்ப்புணர்வு கொண்ட கட்சிகள் மக்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க உதவும். சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழக சட்டமன்றத்திலும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
எந்த விதத்தில் வந்தாலும் தமிழக அரசு என்.பி.ஆர், என்.ஆர்.சியை அமல்படுத்த கூடாது. சி.ஏ.ஏ, என்.பிஆர், என்.ஆர்.சி ஆகியவற்றிக்கு எதிராக போராடுபவர்களை அச்சுறுத்தும் வகையில் காவல் துறை செயல்படுகின்றது.
பா.ஜ.க தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறுபான்மை மக்கள் மீது வன்முறை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர். இவர்கள் மீது டி.ஜி.பியை சந்தித்து மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இன்றைய தினம் கோவையில் “அய்யாவழி பாலமுருகனை” கைது செய்து இருப்பதை கண்டிக்கின்றோம்.
இது பாரபட்சமான நடவடிக்கை,மக்களுக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை இல்லை.அனுராக் தாகூர், கபில் மிஸ்ரா ஆகியோர் மீதும் நடவடிக்கை இல்லை. கருப்பு சட்டங்கள் குறித்து கருத்து சொல்லும் நெல்லை கண்ணன், பாலமுருகன் போன்றோர் கைது செய்யப்படுகின்றனர்.
கோவையில் தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை கண்டிக்கின்றோம். இந்து முன்னணி நிர்வாகி ஆனந்தை தாக்கிய உண்மை குற்றவாளிகளை காவல் துறை கைது செய்ய வேண்டும்.கண்காணிப்பு கேமரா அனைத்து பகுதிகளில் இருக்கும் நிலையில் இந்து முன்னணி அலுவலகம் தாக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய காவல் துறை முனைப்புடன் செயல்பட வேண்டும். ஆத்துப்பாலம் பகுதியில் நடைபெறும் பாலம் கட்டுமான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றார்.
இச்சந்திப்பின் போது தமுமுக மமக தலைமை மற்றும் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
You must be logged in to post a comment.