“தமிழகத்தின் தற்போதைய நிலைக்கு திமுகதான் முழு முதற்காரணம்; திமுகவை ஒழித்து விட்டால், அதிமுக தானாகவே ஒழிந்து விடும்” என்று, தூத்துக்குடியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் கூறினார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மு.அகல்யா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு கேட்டு, தூத்துக்குடி ஸ்பிக்நகரில் நேற்று (5ம் தேதி) மாலை பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது;
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பெயருக்குத்தான் தமிழகத்தை ஆண்டுகொண்டு இருக்கின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், பாஜக-வுடன் கூட்டணி வைத்திருக்க மாட்டார். தற்போது, அதிமுகவை மிரட்டி பாஜக கூட்டணி அமைத்து, தமிழகத்தை ஆண்டுகொண்டு இருக்கிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, ‘ஊழல் ஒழியும், லஞ்சம் ஒழியும், கறுப்பு பணம் வெளியே வரும்’ என்று சொன்னார்கள். ஆனால், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. ‘தீவிரவாதம் ஒழியும்’ என்றார்கள். ஆனால், தற்போதுவரை தீவிரவாத தாக்குதல் நடந்து வருகிறது. ஜிஎஸ்டி-யில் தங்க பிஸ்கட்டுக்கு 3 சதவீத வரியும், மக்கள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இது எந்த விதத்தில் நியாயம்..?
மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டை கொள்முதலில் பல கோடி ஊழல் நடந்துள்ளது. அதிமுக மீண்டும் வெற்றி பெற்றால், இது போன்ற ஊழல் தொடரும். தமிழகத்தின் தற்போதைய நிலைக்கு திமுகதான் முழு முதற்காரணம். திமுகவை ஒழித்துவிட்டால், அதிமுக தனாகவே ஒழிந்து விடும். தமிழகம் கறை படுவதற்கு முழு முதல் காரணம் திமுகதான். அவர்களிடம் படித்து வந்தவர்கள்தான் அதிமுகவினர்.
தமிழகத்தில் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. அனைவரும், தான் இருக்கும்போதே தனது வாரிசுகளுக்கு இடம் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பணம் கொடுக்கத்தான் தெரியும். மக்களின் கஷ்டத்தை புரிந்துகொள்ள மாட்டார்கள். இந்த நிலை மாற வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு தரமான மருத்துவம் வழங்குவோம். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை அகற்றப்படும். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” என்றார்.
You must be logged in to post a comment.