இராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு இன்று (07/02/2019) தொடங்கி நாளையும் (08/02/2019) நடக்கிறது. தமிழகத்தில் உள்ள சரணாலயங்களில் ஒவ்வொரு ஆண்டும் பிப்., 7, 8 ஆகிய தேதிகளில் பறவைகள் கணக்கெடுக்கப்படுகிறது.
மூன்று குழுக்களாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி இக்குழுவினர் ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு, சக்கரக்கோட்டை , சித்திரங்குடி, காஞ்சிங்குளம், தேர்தங்கல், மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் வேம்பார், தூத்துக்குடி வனக்கோட்ட சரணாலயங்களிலும் பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று (07/02/2019) தொடங்கியது.
இக்குழுவினர் மண்டபம் சரகத்திற்குட்பட்ட முயல், மணலி தீவுகள், தனுஷ்கோடி கோதண்டராமர் பிளமிங்கோ பறவைகள் முனை, 2வது குழு கீழக்கரை சரகத்திற்குட்பட்ட அப்பா, முள்ளி தீவுகள், ராமநாதபுரம் வன உயிரின கோட்டத்தில் உள்ள தூத்துக்குடி பகுதியில் உள்ள தீவுகளில் நாளை (08/02/2019) கணக்கெடுப்பு பணியை தொடர்கின்றனர்.
விருதுநகர் மண்டல வன பாதுகாவலர் நிஹர் ரஞ்சன், ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் து.கோ. அசோக்குமார், உதவி வன காப்பாளர் ராஜ்குமார், ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் எஸ். சதிஷ், மும்பையைச் சேர்ந்த பம்பாய் இயற்கை வரலாற்று சங்க துணை இயக்குநர் எஸ். பாலசந்தர், உறுப்பினர்கள் எஸ்.சந்திரசேகர் (சென்னை), ஆர்.ராம்குமார் (மும்பை), கோவை இயற்கை சங்க உறுப்பினர் எச்.பைஜூ, ஆகியோர் முதல் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
கீழக்கரை வனச்சரக அலுவலர் சிக்கந்தர் பாட்ஷா, கோவை காண் உயிர் ஆர்வலர் வன உயிரின வல்லுநர் ஆர்.ராமமூர்த்தி, கோவை வன உயிரின போட்டோகிராபர்கள் ஆர். திவ்ய பாரதி, ஆர்.சுந்தர், ஆகியோர் 2வது குழுவில் இடம் பெற்றுள்ளனர். வனச்சரக அலுவலர் ஆர்.ரகுவரன், கோவை இறகுகள் அரசு சாரா அமைப்பு நிறுவனர் ரவீந்திரன் ஆகியோர் 3வது குழுவில் இடம் பெற்றுள்ளனர். ரஷ்யா, வட, தென் ஐரோப்பா, தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து இடம் பெயர்ந்த செங்கால் உள்ளான், சாம்பல் உள்ளான், காஉபியன் ஆலா, பழுப்பு தலை கடல்புறா, ஊசி வால் வாத்து, பூநாரை, பச்சை உள்ளான், கோட்டான் உள்ளிட்ட அரிய வகை பறவைகள், அனைத்து பகுதிகளில் காணப்படும்.
கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை, புள்ளி அலகு கூலைக்கடா, அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, செந்நாரை, கொக்குகள், நீர்காகம், மீன்கொத்தி உள்ளிட்ட பறவைகள் குறித்து கணக்கிடப்பட்டன.
தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை ஆகிய இடங்களில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பு முதல் நாள் நிறைவில் சாதகமான முடிவு கொடுத்துள்ளது. பறவைகளின் இனப்பெருக்கம் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு உடன் ஒப்பீடுகையில் நடப்பாண்டில் 20 புதிய இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.