தென்காசி பசியில்லா தமிழகம் அமைப்பினர் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு உரிய ஏற்பாடுகளை செய்து, அவர்களின் குடும்பத்தினருடன் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினர் மீட்டு அவருக்கு உரிய முதலுதவி செய்து பாதுகாப்பான தங்குமிடத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி பேருந்து நிலையம் எதிரே ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் இருப்பதாகவும், குடிகாரர்களால் அந்த பெண் துன்புறுத்தலுக்கு ஆளாகுவதாகவும் அந்த பகுதி தன்னார்வலர்கள் மூலம் பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பினருக்கு தகவல் வந்தது. உடனடியாக களத்துக்குச் சென்ற பசியில்லா தமிழகம் குழுவினர் மற்றும் புளியங்குடி சமாதானம் டிரஸ்ட்டை சேர்ந்த திருமலை ஆகியோர் இணைந்து அந்த பெண்ணை மீட்டு அவருக்கு உரிய முதலுதவி செய்து அவருக்கு உணவு வழங்கி புளியங்குடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இரவு நேரம் என்பதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து மனநல சிகிச்சை வழங்க முடியவில்லை. அதே நேரத்தில் அவருக்கு அன்று இரவு பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்காக புளியங்குடி காவல் நிலைய ஆய்வாளர் அனுமதியின் பேரில் தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அன்னை நல்வாழ்வு டிரஸ்ட்ல் அன்று இரவு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டது.
தொடர்ந்து, தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் அனுமதியின் பேரில் புளியங்குடி காவல்துறையில் அனுமதி பெற்று, தென்காசி மாவட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான வடகரை அன்பு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்பு இல்லத்தில் தொடர்ந்து அவருக்கு மனநல சிகிச்சை வழங்கி அவரது இல்லம் கண்டுபிடித்து இல்லத்துடன் சேர்க்கும் பணியை பசியில்லா தமிழகம் குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இன்னும் இது போன்று பல ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் சாலையில் ஆதரவின்றி சுற்றித்திரியும் நபர்களை மீட்டு மனநல சிகிச்சை வழங்கி அவர்களின் குடும்பத்துடன் சேர்க்கும் பணியை பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பு மேற்கொண்டுள்ளது. பசியில்லா தமிழகம் அமைப்பினரை 8883340888 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அவர்களோடு உதவும் பணியில் இணைந்து கொள்ளலாம்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.