Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்படும்-மாவட்ட ஆட்சியர் தகவல்…

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்படும்-மாவட்ட ஆட்சியர் தகவல்…

by ஆசிரியர்

தென்காசி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணத் தொகை ரூ.1000 வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா வைரஸ் (கோவிட்-19) நோய் தொற்று பரவலினை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதனை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, இக்காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கியும், பொருளாதார மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டும் முனைப்புடன் செயல்பட்டுவருகிறது.

தற்போது 30.06.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இவ்வூரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 இலட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 ரொக்க நிவாரணத் தொகையை அவர்கள் வீட்டிலேயே வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் அசல் தேசிய அடையாள அட்டை காண்பித்தும் அதன் நகலினை தங்களது கிராம நிர்வாக அலுவலரிடம் வீடுகளுக்கு வரும்போது சமர்பித்து அரசின் நிவாரணத்தொகை ரூ.1000-ஐ பெற்றுக்கொள்ளலாம்.

விநியோகப்படிவம் பூர்த்தி செய்ய தேவையான விவரங்களை மாற்றுத் திறனாளிகள் அளிக்கவேண்டும். தனி நபர் சம்பந்தப் பட்ட விவரம், கல்வித்தகுதி, வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் (ஸ்மார்ட் கார்டு ) மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையின் விண்ணப்ப நிலை ஆகியவையாகும்.

உங்களது பகுதியின் கிராம நிர்வாக அலுவலர்/நிவாரணத்தொகை வழங்கும் அலுவலர் நிவாரணத்தொகை வழங்கிய விவரத்தினை தேசிய அடையாள அட்டையுடன் கூடிய பதிவு புத்தகத்தில் உதவிகள் வழங்கும் பக்கத்தில் கோவிட்-19 நிவாரணத்தொகை ரூ. 1000வழங்கப்பட்டது.” என்ற முத்திரையிட்டு, வழங்கும் அலுவலர் கையொப்பமிடுவார்.

நிவாரணத்தொகை இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்படும். இந்த நிவாரண உதவித்தொகை 29.06.2020 முதல் 03.07.2020 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயனாளிகளின் இருப்பிடத்திற்கே நேரில் வந்து வழங்கப்படும். மேலும் நிவாரணத் தொகை பெறுவதில் சிரமம் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் தொலைபேசி (எண்: 9499933497)/ 0462-2500157 மற்றும் உதவி மறுக்கப்படும் நேர்வில் அல்லது கிடைக்கப் பெறவில்லை எனில் மாநில மைய எண்: 18004250111-ல் தொடர்பு கொள்ளலாம்.

நிவாரணத் தொகையினை மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் அல்லது சிறப்பு சூழ்நிலையில் பாதுகாவலர்களிடம் மட்டுமே வழங்கப்படும். வேறு மாவட்டங்களை அல்லது நிவாரணத் தொகை வழங்கும் அலுவலர் பகுதிக்கு உட்படாத பிறபகுதிகளை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் விபரம் மற்றும் தேசிய அடையாள அட்டை மற்றும் மருத்துவ சான்றிதழினை பெற்று அவ்விபரங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படும். அரசு போதிய நிதியினை ஒதுக்கியுள்ளதால் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!