இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராமநாதபுரம், பரமக்குடி, நம்புதாளை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.திருநாவுக்கரசர் வழங்கினார்.
அவர் கூறியதாவது: கொரானா பாதிப்பு என்பது தனி நபருக்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. காங்., திமுக., உள்பட அனைத்து அரசியல் கட்சிகள், ரோட்டரி, லயன்ஸ் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதித்தோருக்கு பேரிடர் கால நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறது. கொரானா பரவலை தேசிய பேரிடர் என அறிவித்து மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். அதிகரித்து வரும் கொரானா பாதிப்பு 5 லட்சத்தை எட்டக்கூடும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கை பேரிடர் கால நிவாரணமாக ரூ.ஆயிரம் மட்டுமே தமிழக அரசு வழங்கியுள்ளது. ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் அரசு ஊரடங்கு கால நீட்டிப்பிற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் ரூ.7 ஆயிரம் வரை நிவாரணம் வழங்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் அளித்தால் கூட ரூ.15 ஆயிரம் கோடியே செலவாகும். மத்திய அரசு அறிவித்துள்ள ரூ. 20 லட்சம் கோடி நிவாரணத் நிதியில், ரூ.ஒரு லட்சம் கோடியை மக்களுக்கு நேரடி நிவாரண தொகையாக வழங்க வேண்டும். கொரானா பாதித்தோருக்கு தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீதம் படுக்கைகளை சிகிச்சைக்காக ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரானா பரவல் அதிகரிப்பு இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும். முந்தைய பிரதமர்கள் வாஜ்பாய் என்றால் தங்க நாற்காலி சாலை திட்டம், மன்மோகன் சிங் என்றால் பொருளாதார சீர்திருத்தம், நினைவுக்கு வரும். மோடி என்றதும் கை தட்டுவது, இரவில் விளக்கு ஏற்றுவது தான் நினைவுக்கு வருகிறது.
தேசிய ஊரடங்கு கால கட்டத்தில் மக்களிடம் மின் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்து விட்டன. மோடி அரசு மக்களுக்கான அரசல்ல. தற்போதைய அதிமுக அரசு பாஜகவின் பினாமி அரசாக உள்ளது. என்றார். மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.