சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாக பதிவிட்ட 49 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சமீப காலமாக சமூக வலை தளங்களில் தனி நபர்கள் பிறரை புண்படுத்தும் வகையிலும், இருவேறு சமுதாயத்திற்கு இடையில் வன்மத்தை தூண்டும் விதமாகவும், தாங்கள் சார்ந்த அமைப்பு மற்றும் சமுதாயத்தை பெருமைப்படுத்தும் விதமாக இதர சமுதாயத்தை புண்படுத்தும் வகையில் கருத்துகள், பேச்சுகள், வீடியோ / புகைப்படம் ஆகியவற்றை பதிவிட்டு வருகின்றனர். மேற்படி சமூக வலைதள பதிவுகளால் பொது அமைதிக்கும், பொது மக்களுக்கும் பங்கம் ஏற்படும் வகையிலும், சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலும் இருந்ததால், இந்த வருடம் மட்டும் 49 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.எனவே பொதுமக்கள் சமூக ஊடகங்கள் மற்றும் காட்சி ஊடகங்கள் வழியாக தங்களது எண்ணங்களை, கருத்துகளை பதிவிடும் போது பிறரை பாதிக்காத வகையிலும், தனி நபரை கடுமையாக விமர்சிக்காமலும், இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்காத வகையிலும், இருவேறு சமுதாயம் மற்றும் வகுப்புகளுக்கிடையில் வன்மத்தை தூண்டாமலும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிடாமலும் இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. திருநெல்வேலி மாவட்ட காவல் துறையிலுள்ள சமூக வலைதளப் பிரிவு தினந்தோறும் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து, அதில் வெளிவரும் அனைத்து கருத்துக்கள் மற்றும் பேட்டிகளை கவனமுடன் கவனித்து வருகிறது. எனவே, தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டபடியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.