இராமநாதபுரம் அருகே மானை வேட்டையாடி அதன் இறைச்சியை சிலர் சமைத்துக் கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு நேற்று முன் தினம் இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா அறிவுறுத்தல் படி, ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் நித்யகல்யாணி தலைமையில் வனவர் பரக்கத் நிஷா,வனக்காப்பாளர்கள்முகில்நாதன்,திருப்பதி,முருகேசன்,வனக்காவலர் அஜித்ரன் ஆகியோர் அங்கு விரைந்தனர்.புல்லங்குடி மஞ்சலோடை மரப்பாலம் செங்கல் சூளையில் மானின் இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்த 4 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒன்றரை வயது பெண் புள்ளி மானை சுருக்கு கம்பி மூலம் வேட்டையாடி கொன்றது தெரிந்தது. இதை தொடர்ந மண்ணில் புதைத்து வைத்திருந்த புள்ளி மானின் தோல், மஞ்சள் தடவி வாட்டிய நிலையில் மானின் 4 கால்கள், சமைத்துக் கொண்டிருந்த இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக புல்லங்குடி பகுதியைச் சேர்ந்த முனியாண்டி மகன் முத்துக்குமார் 19, ஆறுமுகசாமி 59, பால்பாண்டி 43, மகாலிங்கம் மகன் சூர்யா 27 ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்து தப்பியோடிய புல்லங்குடி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சரத்குமாரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்த 4 பேரையும் ராமநாதபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இது குறித்து மாவட்ட வன அலுவலர் ஹேமலதா கூறுகையில் ராமநாதபுரம் மாவட்ட வனப்பகுதிகளில், 2022ல் திருத்திய வன உயிரின சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்களை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வன உயிரினங்களை பாதுகாக்க வனத்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும் என்றார்.
34
You must be logged in to post a comment.