தென்காசி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில் தமிழ் வளர்ச்சித் துறையில் 2015 ஆம் ஆண்டு முதல் தமிழ்செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்செம்மல் விருது வழங்க விண்ணப்பங்களை பெற்று அனுப்ப வேண்டியுள்ளது. தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் தமிழ் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்துவதற்காக தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தெரிவு செய்து அவர்களுக்கு தமிழ்செம்மல் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. விருது பெறுபவர்களுக்கு ரூ. 25000 ரொக்கப்பரிசு, தகுதியுரை வழங்கப்பெறும். 2023 ஆம் ஆண்டிற்கு தமிழ் செம்மல் விருதுக்கான விண்ணப்பங்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.in.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது திருநெல்வேலி மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
விருதுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் ஆர்வலர்கள் விருதுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தன் விவரக் குறிப்பு, எழுதிய நூல்கள், கட்டுரைகள் ஏதேனும் வெளியிடப்பட்டிருப்பின் அவை பற்றிய விவரங்கள் பட்டியலோடு ஒவ்வொன்றிலும் ஒரு படி இணைக்கப்பட வேண்டும். தமிழ்ச்சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் ஏதேனும் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருப்பின் அதுப்பற்றிய விவரம், விருதுக்கு தகுதியாகக் குறிப்பிடத்தக்க பணிகள், தமிழறிஞர் இருவரின் பரிந்துரைக் கடிதம், இரண்டு புகைப்படம் ஆற்றிய தமிழ்ப் பணிகளுக்கானச் சான்றுகளையும் இணைத்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக இரண்டாம் தளத்தில் செயல்படும் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் 06.10.2023க்குள் கிடைக்கும் வகையில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0462-2502521 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.