இராமநாதபுரம், செப்.11-இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தியாகி இமானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திரர் பண்பாட்டு கழகம், இமானுவேல் சேகரனாரின் மகள் சூரிய சுந்தரி பிரபா ராணி, அன்னாரது பேரன் சக்கரவர்த்தி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இக்கோரிக்கையை நேரில் வலியுறுத்தினர். 1924 அக். 9ல் இமானுவேல் சேகரன் பிறந்தார். இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் வட்டம். செல்லூர் கிராமம் ஆகும். இவர் 1942 ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். மேலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் சமூக பங்களிப்பை போற்றும் வகையில் அவரது பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி அவர் அடக்கம் செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.3 கோடி மதிப்பில் இமானுவேல் சேகரனுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும். இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.